தீவிரவாதத்தை ஒடு்க்க இந்தியா உருவாக்கும் 'எப்ஐஏ'!
டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படவுள்ள புதிய பெடரல் அமைப்பு தொடர்பான மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தாக்கலாகும் எனத் தெரிகிறது.
Federal investigation agency (FIA) என்ற பெயரில் உருவாகவுள்ள மத்திய ஏஜென்சியில் உளவுப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் அடங்கியிருக்கும். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும், இதன் அதிகார வரம்புகள், இதற்கான பட்ஜெட், மாநில போலீசார் இந்த அமைப்புக்கு எப்படி ஒத்துழைக்க வேண்டும், இதற்காக தனி நீதிமன்றங்கள் அமைப்பது, தனி சட்ட வல்லுனர்களை நியமிப்பது, இந்த அமைப்புக்கான ஊழியர்களை எப்படி தேர்வு செய்வது, இந்த அமைப்புக்கான தனி லேப்கள், ஆயுதங்கள் போன்றவை குறித்து புதிய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் கடந்த ஒருவார காலமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
மேலும் ஐபி, சிபிஐ ஆகியவற்றிலிருந்து இந்த அமைப்பு எவ்வாறு மாறுபட்டதாக இருக்கும், எவ்வாறு இவை தனித்தனியே இயங்கும், அதே நேரத்தில் எப்படி தகவல்களை பகிர்ந்து கொள்ளும் என்பது போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.
இதையடுத்து எப்ஐஏ குறித்த புளூபிரிண்ட் உருவாக்கப்பட்டுவி்ட்டது.
இந்த அமைப்பு தீவிரவாதத் தடுப்பு, அவர்களுக்கு நிதி வருவதை தடுப்பது, நிதி வழங்குவோரை கைது செய்வது, அன்னிய செலாவணி முறைகேடு- போதை மருந்து கடத்தல் கும்பல்களைப் பிடிப்பது ஆகியவற்றை கையாளும்.
இந்த புளூ பிரிண்ட் குறித்து பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் கடந்த இரு நாட்களாக சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா தாக்கலாகும் எனத் தெரிகிறது.