3வது முறையாக ஷீலா முதல்வராக தேர்வு!
டெல்லி: டெல்லி முதல்வராக தொடர்ந்து 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷீலா தீட்சித். நேற்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.
டெல்லி சட்டப் பேரவை தேர்தலில், மொத்தம் உள்ள 70 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமான 3 வது முறையாக ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்த ஷீலா தீட்சித்தே அனைவரது தேர்வாகவும் இருந்த்து.
ஷீலா தீட்சித் பெயரை முதல்வர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோஷினா கித்வாய் முன் மொழிந்தார். அதை சவுத்ரி பிரேம்ராஜ் வழி மொழிந்தார். டெல்லி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக போட்டியின்றி ஷீலா தீட்சித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் 3 வது முறையாக டெல்லி முதல்வராக பதவி ஏற்கிறார்.
பொதுவாக ருமுறை முதல்வராக இருந்தவர் அடுத்த முறை நீடிப்பதே அபூர்வமாகிவிட்ட காங்கிரஸ் கட்சியில், தொடர்ந்து 3 வது முறையாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது ஷீலா தீட்சித் மட்டுமே.
வாழ்க்கைக் குறிப்பு:
1938-ம் ஆண்டு டெல்லி அருகே உள்ள கபுர்தலா மாவட்டத்தில் பிறந்தவர் ஷீலா தீட்சித்.
டெல்லியில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் படித்து எம். ஏ. பட்டம் பெற்றார். அவரது கணவர் வினோத் தீட்சித். ஷீலா தீட்சித்தின் மாமனார் உமா சங்கர் தீட்சித். அவர் அமரர் இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.
அப்போது, அவருக்கு உதவியாளராக ஷீலா தீட்சித் இருந்தார். ஷீலா தீட்சித்தின் சுறுசுறுப்பையும், செயலாற்றலையும் கண்ட இந்திரா காந்தி, 1984-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கனோஜ் தொகுதியில் ஷீலா தீட்சித்தை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். அன்று முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த ஷீலா தீட்சித், 1998ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைக்கு போட்டியிட்டு முதல்வரானார்.
அதன் பிறகு 2003 ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று, டெல்லி முதல்வரானார். இப்போது 3வது முறையாக வெற்றிபெற்று டெல்லி முதல்வராகப் பதவியேற்கிறார்.












Click it and Unblock the Notifications