பாக்.கை தாக்க மாட்டோம், ஆனால் ... - பிரணாப் எச்சரிக்கை
லோக்சபாவில் இன்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு உள்ளது. ஆனால் இதற்காக பாகிஸ்தானை தாக்குவது தீர்வாகாது. அந்த எண்ணமும் இந்தியாவிடம் இல்லை. அதேசமயம், தனது மண்ணில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்பட வேண்டும். இதைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது.
நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை தொலைபேசியில் பேசி மிரட்டியதாக அங்கிருந்து வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். இது நாட்டை திசை திருப்ப முயலும் செயலாகும். தேவையில்லாமல், அந்நாட்டு ராணுவத்தை உஷார்படுத்தி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசு.
இன்னொரு நாட்டுத் தலைவருடன் போனில் பேசுவதாக இருந்தால் முன்கூட்டியே நேரம் பெறப்பட வேண்டும். பேச்சுக்கள் பதிவு செய்யப்பட வேண்டும். இப்படி நடைமுறைகள் உள்ளபோது தேவையில்லாமல் நான் சர்தாரியை மிரட்டியதாக பாகிஸ்தான் வதந்தி கிளப்பி விட்டுள்ளது கண்டனத்துக்குரியதாகும்.
பாகிஸ்தானைத் தாக்குவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இது சிக்கலான ஒன்று.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ளது.
ஆனால் தடை செய்யப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வ சுதந்திரமாக தோன்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதிலிருந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதை உணர முடிகிறது.
தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறது பாகிஸ்தான். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? சொர்க்கத்திலிருந்தா வந்தார்களா? அல்லது வேறு கிரகத்திலிருந்து வந்தார்களா?. அவர்கள் அங்கேயேதானே இருக்கிறார்கள்.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சினையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். சர்வதேச சமுதாயத்த ஈர்க்கும் வகையில் இந்த விவாதம் இருக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு அதிர்ச்சியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தங்களது அனுதாபத்தையும், ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
சமீப காலத்தில் ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூர் மற்றும் பெங்களூரில் நடந்த தாக்குதல்களில் ஒரு திட்டமிட்ட நோக்கம் தெரிகிறது. வெளிநாட்டினரைத்தான் குறி வைத்து தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டினரின் மரணத்திற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் விருந்தினர்கள்.
இந்தப் பிரச்சினையில் இந்தியா மீது தவறு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நாட்டினர் புரிந்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினையின் பரிமாணம் அவர்களுக்குப் புரிந்துள்ளது என்றார் பிரணாப்.