'எஸ்மா', 'டெஸ்மா' ஆட்சியா நடக்கிறது?-கருணாநிதி
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடதுசாரிகள் ஆட்சி நடத்தும் கேரளாவில் வழங்குவதை விட ஆயிரம் ரூபாய் அதிகமாகவே வழங்கத் தயார் என்று மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி பதில் தந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: வெள்ள நிவாரண வினியோகத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இரு கம்யூனிஸ்டு கட்சிகள், அதிமுக, மதிமுக மற்றும் அவற்றின் அணியினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் எவ்வளவு பேர் கைதானார்கள்?
கருணாநிதி: ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 9,418 பேர் கைதாகினர் என்று காவல்துறை கூறுகிறது.
கேள்வி: சாலை மறியல் செய்து கைதான விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தோழர் பாண்டியன் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
கருணாநிதி: இது என்ன; 'எஸ்மா', 'டெஸ்மா' ஆட்சியா?. கைது செய்யப்பட்ட 9,418 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என்பதை செய்தியாளர்களும், பாண்டியனும் தெரிந்து கொள்ளாததுதான் நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது.
கேள்வி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாயும்- முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே?
கருணாநிதி: இது போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகளில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் இருக்கும் கம்யூனிஸ்டு அரசு; எவ்வளவு நிவாரணத் தொகை அளிக்கிறதோ; அதைக் காட்டிலும் அதிகமாக ஆயிரம் ரூபாய் அளித்திட இந்த அரசு நிச்சயமாக தயாராகவே இருக்கிறது.
கேள்வி: தமிழகத்திற்கு வந்து மழை-வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்த மத்திய குழு, தமிழக அரசு செய்து வரும் வெள்ள நிவாரணப் பணிகளை பாராட்டியுள்ளதே?
கருணாநிதி: தமிழகத்திற்கு வந்த மத்திய குழுவின் தலைவர் ஸ்கந்தன் ஐ.ஏ.எஸ், "மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்தது போல் இங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும், அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து நல்ல முறையில் உதவி செய்துள்ளனர். இல்லையெனில் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். கலெக்டர்கள், அதிகாரிகள் ஆகிய அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை அனைத்து தரப்பினரும் பாராட்டியே வருகின்றனர் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications