தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு பிரதமர் கோரிக்கை
டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க மாநில அரசுகள் உறுதியான, விரைவான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த மனித உரிமை மற்றும் சட்டம் குறித்த சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஜனநாயகத்திற்கும், வளர்ச்சிக்கும், மிகப் பெரிய அச்சுறுத்தலாக விஸ்வரூபம் எடுத்து வருவது குறித்த விழிப்புணர்வு நமது பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது.
மாநில அரசுகளும், அதிகாரிகளும், காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும், இதை உறுதியாகவும், விரைவாகவும் ஒடுக்க வேண்டியது அவர்களின் தார்மீகக் கடமையாகும்.
உலகெங்கிலும் உள்ள அமைதி விரும்பிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து, கை கோர்த்து, தீவிரவாதத்திற்கு எதிராக போராட திரள வேண்டும்.
தீவிரவாத மிரட்டல் சற்றும் வலுக் குறையவில்லை. அதேசமயம், தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் எந்தப் பிளவும் இல்லை. சுதந்திரத்தைக் காப்பதிலும், அமைதியை நிலை நிறுத்துவதிலும் எந்தப் பின்னடைவும் இல்லை.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கு தங்களது ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்தன. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அண்டை நாடுகளின் தலைவர்கள் உள்பட பல தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பேசினர்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என அவர்கள் அப்போது உறுதியளித்தனர் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications