சென்னைக்கும் வந்துவிட்டது 3 ஜி!
சென்னை: மக்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கிடந்த 3ஜி எனப்படும் மூன்றாம் தலைமுறை செல்போன் தொழில்நுட்பம் இப்போது சென்னைக்கும் வந்துவிட்டது.
இந்தியாவில் இதனை அரசுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல் நிறுவனம் அளிக்கிறது.
சென்னையில் பி.எஸ்.என்.எல் இந்த சேவையை அளிக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இன்னும் பல மாதங்களுக்குப் பிறகே இந்த சேவையை வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.
3 ஜி தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. இந்த வசதியைக் கொண்ட மொபைல்கள் மூலம், செல் பேனிலேயே வீடியோ கான்பரன்சிங், இணைய தள சேவை, தொலைக்காட்சி சேவை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் கிடைக்கும்.
இது முழுக்க முழுக்க வயர்லஸ் பிராட்பேன்ட் தொழில் நுட்பம் என்பதால் இதுவரை இருந்ததைப் போலல்லாமல் இணையதள சேவையும் அதிவேகமாக இருக்கும். சாதாரண மொபைலில் நாம் அனுபவித்த வேகத்தை விட 40 மடங்கு அதிவேகமான சேவையை 3 ஜி மொபைல்களில் பெறமுடியும்.
3 ஜி பெருமைகளை நாம் இப்படி அடுக்கிக் கொண்டே போக, இதற்கடுத்த 4 ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன மேற்கத்திய நாடுகள். இது 3ஜியைவிட பல மடங்கு அதிவேகம் கொண்ட தகவல் தொழில்நுட்ப வசதி ஆகும்.