வீட்டுக் கடன் வட்டியை குறைத்தன வங்கிகள்
வீட்டுக்கடன்களுக்கு இதுவரை 11 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த வட்டி விகிதம் மிக அதிகம் என்பதால் தவணை செலுத்த முடியாமல் நடுத்தர குடும்பங்கள் அவதிப்படுகின்றன. பொருளாதாரம் தடுமாறிக் கொண்டுள்ள இந்த சூழலில் அரசு மற்றும் அனைத்து தனியார் துறை வங்கிகளும் வீட்டுக் கடன் வட்டியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பலவேறு சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய நிதியை வீட்டுக் கடன் வசதி வங்கிகளுக்கு அளித்துள்ளது.
ஆனால் இந்த உதவிகள் அறிவிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும், வணிக வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் அரசுத்துறை வங்கிகள் வட்டி குறைப்பு குறைத்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
மாறாக ரொக்க இருப்பு விகிதம், ரெபோ ரேட் குறைப்பு பற்றியே விரிவாக விவாதித்து வருகின்றன.
ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூட, வங்கிகளின் இந்தப் போக்கைக் கண்டித்ததோடு, அரசு அறிவித்துள்ள சலுகைகளை கீழ்மட்ட மக்களுக்கு வங்கிகள் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் அரசு வங்கி சேர்மன்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், நிதி அமைச்சக அதிகாரிகளை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்துப் பேசினர். அப்போது வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்க அரசு வங்கி நிர்வாகிகள் ஒப்புக் கொண்டனர்.
அதன்படி இப்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களை அரசுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
நாட்டில் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர், 20 லட்சத்துக்கு குறைவாகத்தான் வாங்குகின்றனர். இப்போது மாறும் வட்டி வீத முறையில வட்டி 11 சதவீதமாக உள்ளது. அதை 1.75 சதவிகிதமாகக் குறைத்து 9.25 சதவீதமாக்கியுள்ளன.
அதேபோல 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 2.5 சதவிகித வட்டியைக் குறைத்து 8.5 சதவிகிதமாக்கியுள்ளனர்.
இந்த வட்டி விகிதக் குறைப்பால் தற்போது கடன் வாங்கியுள்ளோர் எந்த அளவு பயனடைவார்கள் என்பது தெரியவில்லை.