திருமங்கலத்தில் ராதிகா போட்டியிடுவாரா?

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேளச்சேரி பகுதி செயல்வீரர்கள் கூட்டம் மந்தைவெளியில் உள்ள தென்சென்னை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளச்சேரி பகுதி செயலாளர் சி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ஜே.நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், நடைபெற இருக்கும் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட வேண்டும்.
இந்த தொகுதியில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதற்கான கோரிக்கை அடங்கிய மனுவை நம் மாவட்டம் சார்பில் கட்சி தலைவர் சரத்குமாரிடம் அளித்து வலியுறுத்த வேண்டும் என்றார்.
இதையடுத்து ராதிகாவை வேட்பாளராக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத்குமாரின் யோசனைப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேறியிருக்கும் என்று கருதப்படுகிறது.
சமீப காலமாக ராதிகாவை கட்சியில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும், முக்கியப் பொறுப்பு அளிக்க வேண்டும் என கட்சியினர் வற்புறுத்தி வருகின்றனர். அதை ஏற்று ராதிகாவுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று கட்சித் தலைவர் சரத்குமாரும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் டெல்லி சென்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவில் சரத்குமாருக்குப் பதில் ராதிகா இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் திருமங்கலம் தொகுதியில் ராதிகாவை நிறுத்த வேண்டும் என கட்சிக்குள் கோரிக்கை எழுந்துள்ளது. கட்சியினர் விருப்பப்படி ராதிகா நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications