மயிலாடுதுறையில் பிராமண வேட்பாளர்-பிஎஸ்பி
திருவண்ணாமலை: மயிலாடுதுறையில் பிராமண வகுப்பைச் சேர்ந்த சப்தரிஷி பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் சிவகாமி தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
அரசுப் பணிகளில் இருந்தால் சட்டத்தை அமல்படுத்தவும், மக்களுக்கு உதவி செய்யவும் மட்டும் முடியும். அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் சட்டம் கொண்டு வரவும், அதை திருத்தம் செய்யவும் முடியும். அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். மயிலாடுதுறையில் பிராமண வகுப்பைச் சேர்ந்த சப்தரிஷி போட்டியிடுகிறார்.
தென்சென்னையில் தீரன், சிவகாசியில் கனக கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியிடுவர். கோவையில் பத்திரிகையாளர் ராமசுப்பு போட்டியிடுகிறார்.
காஞ்சிபுரம், விழுப்புரம், அரக்கோணம் ஆகிய மூன்று தொகுதிகளில், ஏதாவது ஒன்றில் நான் போட்டியிடுவேன்.
அதிமுகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவதற்காக பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறார்.
உத்தரப்பிரதேசம், உத்திராஞ்சல் மாநிலங்களில் 70 எம்பி தொகுதிகள் எங்கள் வசம் உள்ளனர். அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்றார் சிவகாமி.