சென்னை, மதுரை, கோவை, திருச்சி ரயில் நிலையங்களுக்கு குண்டு மிரட்டல்

இதனால் பல ரயில்கள் தாமதமாகக் கிளம்பிச் செல்கின்றன. சோதனைகள் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை க்யூ பிரிவு போலீஸ் ஐ.ஜியின் செல்போனுக்கு இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில், சென்னை எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், ரயில்வே ஐ.ஜி. உமாகணபதி சாஸ்திரி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
மாநிலத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. மிரட்டல் விடுக்கப்பட்ட எழும்பூர், தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் அனைத்திலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும், அவர்களது உடமைகளும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. இதனால் ரயில் நிலையங்களுக்குள் நுழையவே பயணிகள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
ரயில் நிலையங்கள் முழுவதும் மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனையும் நடத்தப்பட்டது.
பிளாட்பாரங்கள், நடைபாதை, பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் கவுண்டர்கள், வாகனம் நிறுத்தும் இடம், பார்சல் சர்வீஸ் பிரிவு, நின்றிருந்த ரயில்கள் என எல்லா இடங்களிலும் சோதனைகள் நடக்கின்றன.
வெளியூர்களில் இருந்த வந்த ரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தவிர மாநில போலீசாரும் பெருமளவில் சோதனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் பல ரயில்களும் தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.












Click it and Unblock the Notifications