முன்மொழிய ஆள் தேடி அலைந்த சுயேச்சை
திருமங்கலம்: மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் மனுவை முன்மொழியவும், வழிமொழியவும் உள்ளூரை சேர்ந்த 4 வாக்காளர்களைத் தேடி தெருத் தெருவாக அலைந்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ள இந்தத் தொகுதியில் நேற்று 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்தத் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் இவரது அலுவலகம் உள்ளது.
உதவி அதிகாரியாக திருமங்கலம் தாசில்தார் சேதுராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மதுரையில் ராமச்சந்திரனிடமோ அல்லது திருமங்கலத்தில் சேதுராமனிடமோ வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர்முகமது (51) என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்ய திருமங்கலம் வந்தார். வேட்பு மனு படிவத்தை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
மனுவை நிரப்பிய அவர் அந்த மனுவை முன்மொழியவும், வழிமொழியவும் உள்ளூரை சேர்ந்த 4 வாக்காளர்களை மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் முன்மொழிய சென்றவர்களில் 2 பேரின் பெயர் தொகுதி வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் மனுவை தாக்கல் செய்ய முடியாமல் நூர்முகமது மீண்டும் வெளியே வந்தார்.
பின்னர் அந்தப் பகுதியில் சுற்றி அலைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள 4 பேரை தேடிப்பிடித்து மீண்டும் உதவித் தேர்தல் அதிகாரி சேதுராமனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன் மொழிய ஆள் தேடி இவர் கிட்டத்தட்ட 5 மணி நேரம் தெருத் தெருவாய் அலைந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழகத்தில் நடந்த மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்கள் என 17 முறை போட்டியிட்டு டெபாசிட் இழந்த பெருமை உடையவராம்.
சிவசேனா வேட்பாளர்:
இவரைத் தொடர்ந்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த மதுரை மாவட்டத் தலைவர் பரமசிவராஜா (43) என்பவரும் மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications