சென்செக்ஸ்: சத்யம் கம்ப்யூட்டஸ் பங்குகளுக்கு பலத்த அடி!
மும்பை: வட்டி விகிதத்தை குறைத்து அமெரிக்கா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இந்திய பங்குச் சந்தை சாதகமாக தொடங்கியது. ஆனால் சில நிமிடங்கள்தான் இந்தப் போக்கு நீடித்தது.
துவக்க பெல் ஒலித்ததுமே சென்செக்ஸ் மளமளவென்று 144 புள்ளிகள் உயர்ந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே குறைந்து மீண்டும் 10 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போய்விட்டது. தேசிய பங்குச் சந்தை நிப்டியில் ஆரம்பத்தில் லேசான உயர்வு தெரிந்தாலும், பின்னர் அப்படியே 'யு டர்ன்' அடித்து குறியீட்டெண் சிவப்புக்குத் தாவிவிட்டது.
இன்றைய வர்த்தக நேர ஆரம்பத்திலேயே சத்யம் கம்யூட்டர்ஸ் பலத்த அடியைச் சந்தித்தது. அதன் பங்குகள் 30 சதவிகிதம் வரை விலைச் சரிவைச் சந்தித்து கடும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
காலை 10.30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 9906.75 புள்ளிகள். கிட்டத்தட்ட 100 புள்ளிகள் இழப்பு.
நிப்டி: 3010.20. இழப்பு 31 புள்ளிகள். இன்று முழுவதும் அதிகபட்ச ஊசலாட்டத்துடன் வர்த்தகம் இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.