செல்வப்பெருந்தகையை பதவி நீக்க அதிமுக கோரிக்கை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையை பதவி நீக்கம் செய்துவிட்டு, மங்களூர் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் சட்டசபை செயலாளர் செல்வராஜிடம், பர்கூர் அதிமுக எம்எல்ஏ தம்பிதுரை கொடுத்துள்ள மனுவில்,
8.5.06 அன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் தொகுதியில் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாகவும், மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து செயல்படப் போவதாகவும் பேட்டி அளித்துள்ளார்.
அரசியல் அமைப்புச் சட்டம் 10வது சரத்தின்படி, எந்தக் கட்சியின் சார்பில் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டாரோ, அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தாமாக விலகும்பட்சத்தில் அவர் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது.
தானாக முன்வந்து கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் அவரை பதவி நீக்கம் செய்யாமல், அவரது ராஜினாமா கடிதத்துக்கு காத்திருப்பது அவசியமல்ல. இதற்கு சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன.
எனவே காலம் தாழ்த்தாமல், அரசியல் அமைப்புச் சட்டம் 10வது சரத்தின் அடிப்படையில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ததாக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications