மகாராஷ்டிரா அரசு உருவாக்கும் போர்ஸ்-1 கமாண்டோப் படை
நாக்பூர்: தீவிரவாதிகளின் தாக்குதலின்போது அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்த, என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்கு இணையான, போர்ஸ்-1 என்ற புதிய கமாண்டோப் படையை உருவாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படையில் முதல் கட்டமாக 250 பேர் இடம் பெறவுள்ளனர். இவர்களுக்கு அதி நவீன எம்பி5 துப்பாக்கிகள் வழங்கப்படவுள்ளன. தீவிரவாதத் தாக்குதலின்பபோது இந்தப் படையினர் கமாண்டோக்களாக களம் இறங்குவார்கள்.
நாக்பூரில் நடந்து வரும் மகாராஷ்டிர மாநில சட்டசபைக் கூட்டத்தில் பேசுகையில், மாநில உள்துறை அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் இத்தகவலைத் தெரிவித்தார்.
முதல்வர் அசோக் சவான் பேசுகையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக, டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர் ஆகியோர் பக்கம் தவறு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
ஜெயந்த் பாட்டீல் தொடர்ந்து பேசுகையில், மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி அவர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மகாராஷ்டிர அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது.
மாநிலத்தின் உளவுக் கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும். புதிதாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, உளவுப் பணியில் சேர்க்கப்படுவர்.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும். இந்த வழக்கில் அரசுக்கு உதவுவதற்காக சிறப்பு அரசு வக்கீலாக ஜூவால் நிகாம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னும் 7 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 36 ஸ்பீட் படகுகள் வாங்கப்படும். அவற்றில் 12 படகுகள் உடனடியாக வாங்கப்படும் என்றார் பாட்டீல்.












Click it and Unblock the Notifications