கோவில் நுழைவுப் போராட்டம் - 2 சிபிஎம் எம்.எல்.ஏக்கள் கைது
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தலித் மக்களுடன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவில் அருகே பந்தபுளி கிராமத்தில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநில செயலாளர் வரதராஜன் தலைமையில் தலித் மக்களின் கோயில் நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்கிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்தபுளி கிராமத்தை சேர்ந்த 7 சமுதாய மக்கள் மலையில் குடியேறினர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் ஊர் திரும்பினர்.
இந்த பதட்டமான சூழ்நிலையில் கரிவலம் போலீஸ் சரகத்திற்குப்பட்ட பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. தடையை மீறி சங்கரன்கோவிலில் இருந்து நேற்று ஊர்வலமாக சென்று கோயில் நுழைவு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் அறிவி்த்தது.
நேற்று காலை மார்க்சிஸ்ட் கட்சியினர் பஸ், கார், வேன்களில் சங்கரன்கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். எஸ்பி ஆஸ்ரா கார்க் தலைமையில் ஏடிஎஸ்பி மாணிக்கராவ், சங்கரன்கோவில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தாழையூத்து டிஎஸ்பி தங்கசாமி ஆகியோர் மேற்பார்வையில் நூற்றக்கனக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
காலை 11.45க்கு எம்எல்ஏக்கள் பாலபாரதி, நன்மாறன், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையில் கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக பந்தபுளிக்கு புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 2 எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும், கைது செய்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications