தொடரும் கொலைகள் - மதம் மாறுவோம் என தலித்கள் மிரட்டல்
நெல்லை: தங்களது சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலைகள் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவோம் என நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள கிராமத்தினர் ஆட்சித் தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு கிராமத்தில் ஆர்எஸ்ஏ நகர் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் சுமார் 200 பெண்கள் உள்பட 500 பேர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாளகத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
உடனே அங்கிருந்த போலீசார் அவர்களில் 2 பேரை அழைத்து கலெக்டரிடம் மனு கொடுக்க கூறினர். ஆனால் கலெக்டர் நேரடியாக வந்து தங்களின் குறைகளை கேட்க வேண்டும் என்று கூறி கலெக்டர் மனு பெற்றுக் கொண்டிருந்த அலுவலகத்தை முற்றுகையி்ட்டு அறை வாசலில் அமர்ந்தனர்.
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் ஞானசேகரன், பாளை இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்களில் சிலரை அழைத்து சென்று கலெக்டரை சந்திக்க செய்தனர்.
கலெக்டரிடம் தலித் மக்கள் கொடுத்த புகார் மனுவில், 1997ம் ஆண்டில் நடந்த சாதிமோதலில் தாழ்த்தப்பட்ட மக்களான எங்கள் பகுதியை சேர்ந்த சுடலைமணி, ராமசந்திரன், உய்க்காட்டான், ராமன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
பலமுறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி கூட்டம் நடத்தியும் எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி மூக்காண்டி என்பவரையும் கரையிருப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்து விட்டனர்.
பலர் கொல்லப்பட்டதாலும், அமைதி கூட்டம் நடத்தி எந்த பலனும் இல்லாததாலும், தாழ்த்தப்பட்ட மக்களாகிய நாங்கள் 400 குடும்பத்தினர் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதாக முடிவு செய்துள்ளோம்.
எனவே எங்கள் ஊர் மக்கள் அமைதியாகவும், எந்தவித பிரச்சனையும் இன்றி வாழ தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications