ஜெயேந்திரர்-விஜயேந்திரர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு-கோர்ட்டில் ஆசி!!
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டுக்கு வந்திருந்த ஜெயேந்திரரிடம் ஏராளமானோர் ஆசி பெற்றனர்.
சங்கரராமன் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் நேற்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடங்கவுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று இவர்கள் மீது புதுச்சேரி கோர்ட்டில், குற்ற சதி, கோர்ட்டை தவறான தகவல் கொடுத்து திசை திருப்புதல், கொலை, அத்துமீறி நுழைதல், குற்றச் செயலுக்கு பணம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
24 பேர் மீதான குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி கிருஷ்ணராஜா வாசித்தார். ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டையும் படித்து முடித்ததும், இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, அனைவருமே நாங்கள் நிரபராதிகள் எனத் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று, விசாரணை எப்போது தொடங்கும் என்பதை நீதிபதி அறிவிப்பார்.
இரு மடாதிபதிகள் தவிர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தரேசன், ரகு, கிருஷ்ணசாமி என்கிற அப்பு, கதிரவன், ரஜினிகாந்த் என்கிற ரஜினி சின்னா, அம்பிகாபதி என்கிற அம்பி, பாஸ்கர் என்கிற மது பாஸ்கர், குமார், அனந்தகுமார் என்கிற ஆனந்த், அனில் குமார் என்கிற அனில், மீனாட்சி சுந்தரம் என்கிற சுந்தர், ஆர்.டி. பழனி, ரவி என்கிற குருவி ரவி, ஆறுமுகம், பாண்டியன் என்கிற தில் பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வஸ்டர் என்கிற ஸ்டாலின், செந்தில்குமார் ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
24 பேர் மீதும் 14 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சுப்ரமணியம் என்கிற ரவி சுப்ரமணியம் அப்ரூவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைதான ஜெயேந்திரருக்கு கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே தினத்தில் விஜயேந்திரர் கைது செய்யபப்பட்டார். பின்னர் அவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக வழக்கு காலையில் விசாரணைக்கு வந்தபோது இரு சங்கராச்சாரியார்களும் வந்திருக்கவில்லை.
இருவரும் வந்து விடுவார்கள் எனவும் அதுவரை ஒத்திவைக்க வேண்டும் என அவர்களின் வக்கீல் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து சுமார் முக்கால் மணி நேரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 11.10 மணியளவில் சங்கராச்சாரியர்கள் வந்தனர்.
முதல் மாடியில் உள்ள கோர்ட்டுக்கு வந்ததும் அங்கு அமரவைக்கப்பட்டனர். மற்ற வழக்கு விசாரணை நடந்து முடிந்து 12.55 மணிக்கு சங்கரராமன் கொலை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதுவரை கோர்ட்டு வளாகத்திலேயே சங்கராச்சாரியார்கள் இருந்தனர். அப்போது வக்கீல்கள், பிற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் அவர்களை சந்தித்து ஆசி வாங்கிச் சென்றனர்.
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் கோர்ட்டு வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.