நெல்லை அருகே தேமுதிக செயலாளர் படுகொலை
நெல்லை: நெல்லை அருகே தேமுதிக செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மானூர் அருகேயுள்ள வடக்கு வாகைகுளத்தை சேர்ந்த பரமசிவதேவர் மகன் முருகன். தேதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த வந்த இவர் விவசாயம் மற்றும் வட்டி தொழில் செய்து வந்தார்.
இதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் மாரியப்பன். அதிமுக பிரமுகரான இவர் வாகைகுளம் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர். இவரது மனைவி சுந்தரி தற்போது வாகைகுளம் பஞ். தலைவராக உள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தேமுதிக கொடிகம்பம் திருடு போனது. இதுகுறித்து முருகன் மானூர் போலீசில் புகார் செய்தார். இதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை.
கொடிகம்பத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் முருகன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று முருகன் வாகைகுளத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மாரியப்பன், தேமுதிகவை சேர்ந்த ஆறுமுகம், அதிமுக பிரமுகர்கள் சுப்பையா, சுப்பு உள்பட 6 பேர் அரிவாளால் முருகனை வெட்டிவிட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த முருகனை அங்கிருந்தவர்கள் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகன் இறந்தார்.