பாகிஸ்தானை உண்மையிலேயே ஆள்வது யார்? பிரணாப் கேள்வி
டெல்லி: பாகிஸ்தானில் யாரிடம் போய் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசுவது என்று தெரியவில்லை. உண்மையில் அங்கு ஆட்சி புரிகிறார்கள் என்பதும் சந்தேகமாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானை ஆட்சி புரிவது சர்தாரியா, கிலானியா அல்லது ராணுவமா என்ற தொணியில் இவ்வாறு கேட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி.
பாகிஸ்தானில் உருப்படியான ஆட்சி இல்லை என்பதையும் அவர் தனது பேச்சின் மூலம் உலகுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.
பிரணாப் முகர்ஜி பேசுகையில், அடுத்தவர்களுக்கு எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுக்க முடியாது. யாருடன் பேச வேண்டும் என்பது நமக்குத் தெரிய வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், யார் ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதும் நமக்குத் தெரிய வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, ஆட்சியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ளாத நிலையில், அந்த அரசுடன் பேச்சு நடத்துவதால் என்ன புண்ணியம்?
வெறும் தேர்தலை நடத்தி முடிப்பதன் மூலம் மட்டும் ஜனநாயகம் வந்து விடாது. அது ஜனநாயகமும் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். அதை விட முக்கியமாக ஒரு அதிகார மையம் மட்டுமே அங்கு இருக்க வேண்டும். அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு பொம்மை அரசாக உள்ளது.
நம்மிடம் பிடிபட்டுள்ள தீவிரவாதி, தன்னை யார் வழி நடத்தியது, தன்னை யார் ஏவியது என்பது உள்ளிட்ட பல திடுக்கிடும் விவரங்களை தெரிவித்துள்ளான். அத்தனை தகவல்களும் அதிர்ச்சிகரமானவை.
மும்பையில் நடந்தது சாதாரண சம்பவமல்ல. திட்டமிட்ட படுகொலைச் சம்பவம். பயங்கரவாத செயல். இதைச் செய்த குற்றவாளிகளை சும்மா விட முடியுமா என்றார் பிரணாப் முகர்ஜி.
சர்தாரி மீது பாக். மனித உரிமை தலைவர் பாய்ச்சல்:
இதற்கிடையே, பாகிஸ்தானில் நல்ல தலைமை இல்லாததால்தான் மும்பை தீவிரவாத தாக்குதல் பிரச்சினையில் பாகிஸ்தான் அரசு பெரும் குழப்பத்துடன் செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை விவகாரத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குழப்பமாகவே உள்ளது. காரணம், நல்ல தலைமை இல்லாததே. அங்கு தலைவரை தேர்ந்தெடுக்கவில்லை. நியமித்திருக்கிறார்கள்.
தலைவர்களை எப்போதும் யாரும் விலை கொடுத்து வாங்கி அமர வைக்க முடியாது. இயற்கையிலேயே தலைமைத்துவ பண்புகள் இருப்பவர்களுக்கு மட்டுமே அந்தப் பொறுப்பு பொருத்தமாக இருக்கும்.
(கஸாப் குறித்து) நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவை. ஒன்று நடந்து விட்டது. அதை விசாரிக்க வேண்டாமா. அதை ஏன் மூடி மறைக்க முயற்சிக்க வேண்டும். அடுத்த நாட்டின் நலனுக்காக மட்டுமல்லாது, நமது நாட்டின் நலனுக்காகவும் அதை விசாரிக்க வேண்டாமா என்று அவர் கூறியுள்ளார்.