நில விவகாரம்-வீரபாண்டிக்கு நோட்டீஸ்
சென்னை: சேலம் அங்கம்மாள் காலனியில் வசித்து வந்தவர்களின் நிலங்களைப் பறிக்க முயன்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், தமிழக அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமே காரணம். அவரது தூ ண்டுதலின் பேரில்தான் இத்தனை குடும்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக குடியுரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹரிபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் 27.6.2008 அன்று உயர்நீதிமன்ற பெஞ்ச் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதில் அங்கம்மாள் காலனியில் இருந்து குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அவர்களை அங்கு மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சேலம் போலீஸ் கமிஷனருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கம்மாள் காலனி வாசிகள் 3.7.2008ல் சேலம் காவல்துறை கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, வடிவேல், கோகிலா உள்பட 23 குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
அதில், தாங்கள் கொடுத்த புகார் மனு மீது அமைச்சர் தலையீட்டின் பேரில் போலீசார் விசாரணை நடத்தாமல் இருப்பதாக வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி மீண்டும் அதே இடத்தில் தங்களை குடியமர்த்த உத்தரவிட வேண்டும் என்றும், அங்கம்மாள் குடியிருப்பு வாசிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் தள்ளி வைப்பதாக நீதிபதி சுகுணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications