கர்கரேவை சுட்டுக் கொன்றது தீவிரவாதிகள்தான்-மும்பை போலீஸ் விளக்கம்

இதன் மூலம் அமைச்சர் அந்துலேவின் வாதம் பிசுபிசுத்துப் போயுள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற தாஜ், டிரைடண்ட், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களுக்கு கர்கரேவை போகவிடாமல், அவரை காமா மருத்துவமனைக்குப் போகச் சொன்னது யார் என்று கேள்வி எழுப்பியதோடு, இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சியைக் கிளப்பினார் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே.
அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது அமைச்சர்ப தவியை அவர் ராஜினாமா செய்து பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.
இந் நிலையில் கர்கரேவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தீவிரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுகள்தான் கர்கரேவை கொன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் கர்கரே மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கையை மும்பை குற்றப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர அரசிடம் அளித்துள்ளனர்.
கர்கரே உடம்பை நான்கு புல்லட்டுக்கள் துளைத்துள்ளன. இவை அனைத்துமே தீவிரவாதிகளின் துப்பாக்கியிலிருந்து வந்தவை.
மும்பைத் தாக்குதலின்போது கர்கரேவுக்கு வந்த மற்றும் கர்கரே அனுப்பிய ஒவ்வொரு வயர்லஸ் செய்தியின் விவரத்தையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
முதலில் தீவிரவாதிகள் காமா மருத்துவமனைக்கு தவறுதலாகப் போய் விட்டனர். அங்கு நுழைந்த அவர்கள், வாசலில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்று விட்டு இன்னொருவரைப் பிடித்து உள்ளே எப்படிப் போவது என்று கேட்டுள்ளனர்.
கிட்டத்த 20 நிமிடங்கள் மருத்துவமனைக்குள்ளேயே இருந்துள்ளனர் தீவிரவாதிகள். அவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்று சரியாகத் தெரியில்லை. பின்னர் மருத்துவமனை வாசலுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
தீவிரவாதிகள் காமா மருத்துவமனைக்குள் புகுந்திருக்கும் தகவல் கர்கரேவுக்கு வயர்லெஸ்சில் கிடைத்துள்ளது. இதையடுத்தே கர்கரே, கூடுதல் ஆணையர் அசோக் காம்தே, இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கர் ஆகியோர் ஒரே வாகனத்தில் அங்கு சென்றனர்.
காமா மருத்துவமனையை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்த கஸாப்பும், அவனுடன் இருந்த தீவிரவாதியும், அவர்களை நோக்கி சுட்டுள்ளனர்.
போலீஸ் வாகனம் வருகிறதே என்று நினைத்துத்தான் அவர்கள் சுட்டுள்ளனர். அதில் இருந்தவர்கள் உயர் அதிகாரிகள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 அதிகாரிகளுமே உயிரிழந்தனர் என்று மும்பை குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பை போலீஸாரின் இந்த அறிக்கையால், அந்துலேவுக்கு மேலும் நெருக்கடி முற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications