Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களிடையே போர் பீதியை உருவாக்கும் பாக். - போர் விமான ரோந்து, கடற்படை பயிற்சி

Subscribe to Oneindia Tamil

Pakistan Air Force
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்களிடையே போர் பீதியைத் தூண்டி விட்டு வருகிறது அந்நாட்டு அரசு. முக்கிய நகரங்கள் மீது விமானப்படை விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. இதேபோல கடற்படையும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்தியா தாக்கப் போகிறதோ என்ற பீதியில், பாகிஸ்தான் மக்கள் மூழ்கியுள்ளனர்.

மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானிடம் சில முக்கிய தீவிரவாதிகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. ஆனால் யாரையும் தர முடியாது, பாகிஸ்தானியர்கள் யாருக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பே இல்லை என்று பேசி வருகிறது பாகிஸ்தான்.

இதனால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா விமானங்கள் மூலம் தாக்கி அழிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து இந்தியா இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், இந்தியா தாக்கப் போகிறது என்ற பீதியை மக்களிடையே பரப்பத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான் நிர்வாகம்.

நேற்று பிற்பகலுக்கு மேல் பாகிஸ்தான் போர் விமானங்கள் அந்த நாட்டின் முக்கிய நகரங்களுக்கு மேல் ரோந்து சுற்ற ஆரம்பித்தன. இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்கள் மீது திடீரென போர் விமானங்கள் தென்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

மிக குறைந்த உயரத்தில் அவை பறந்ததால் காதுகளைக் கிழிக்கும் சத்தம் கேட்டது. மக்கள் பெரும் பதட்டமடைந்தனர்.

இதனால் பத்திரிக்கை அலுவலகங்கள், டிவி அலுவலகங்களுக்கு பலரும் போன் செய்து, போர் வந்து விட்டதா, இந்தியா தாக்கப் போகிறதா என்று அச்சத்துடன் கேட்டனர். மீடியாக்களுக்கும் ஏன் இந்த போர் வேகம் என்று புரியவில்லை.

இந்த நிலையில் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹூமாயூன் ஷபீர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தற்போதைய சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் விமானப்படை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த ரோந்து நடவடிக்கை என்று விளக்கினார்.

இதேபோல இந்தியாவுடனான கிழக்கு எல்லையில் கூடுதல் ரேஞ்சர்களை குவித்து வருகிறது பாகிஸ்தான். மேலும் ரேஞ்சர்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்நாட்டு கடற்படையும், கடலோரக் காவல் படையும் (மெரைன் செக்யூரிட்டி ஏஜென்சி) போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

பாகிஸ்தான் மெரைன் செக்யூரிட்டி ஏஜென்சியின் 3 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பயிற்சியில், பாகிஸ்தான் கடற்படையின் முன்னாள் போர்க் கப்பலான கசிரும் கலந்து கொண்டது.

சர் க்ரீக் பகுதியில் இந்தப் போர் பயிற்சியை பாகிஸ்தான் மேற்கொண்டது. வழக்கமாக இந்தப் பகுதியை பாகிஸ்தான் தனது பயிற்சிக்குப் பயன்படுத்துவதில்லை என்பதால் இதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

நாட்டைக் காப்போம் - கிலானி

இப்படி நாடு முழுவதையும் பதட்டத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் பாகிஸ்தான், தனது எல்லையைக் காக்க ஒருங்கிணைந்து போராடும் என அந்நாட்டு பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

இதுகுறித்து கராச்சியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், கிழக்கு எல்லையைக் காக்க அனைவரும் திரண்டு நிற்கிறோம். அரசியல் சக்திகள், பொதுமக்கள், ராணுவம், அரசு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருமே நாட்டைக் காக்க ஒற்றுமையுடன் இருக்கிறோம்.

நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. சிறப்பான பயிற்சி பெற்ற ராணுவம் நம்மிடம் உள்ளது. ராணுவமும் ஜனநாயக அரசும் சேர்ந்து இந்த நாட்டைக் காக்கும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+