மும்பை: பாக். உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும் - வாஷிங்டன் போஸ்ட்
வாஷிங்டன்: தீவிரவாதத்திற்கு எதிரான போர் வெற்றியடைய வேண்டுமானால், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உண்மையை மறைக்க நினைப்பது, காரணத்தைக் கூற முயல்வது ஆகியவற்றை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் தலையங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ...
மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவம் பாகிஸ்தானிலிருந்துதான் நடத்தப்பட்டது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் அந்த உண்மையை ஒத்துக் கொள்ள பாகிஸ்தான் மக்கள் அரசு மறுத்து வருகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு சபையால் தடை விதிக்கப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பு மீதான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு திருப்திகரமான வகையில் நிறைவேற்றவில்லை.
இந்தியாவின் நாடாளுமன்றம் மீது கடந்த 2002ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டபோது, லஷ்கர் இ தொய்பா மீது பாகிஸ்தான் கண் துடைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் அந்த அமைப்பு இப்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதுப் பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. எனவே பாகிஸ்தானின் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாகவே உள்ளன.
இது வரலாற்றில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் லஷ்கர் அமைப்பைத் தடை செய்தது பாகிஸ்தான். அதன் அமைப்பினரையும் கைது செய்தது. ஆனால் போகப் போக அனைவரும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அந்த அமைப்பும் புதுப் பெயருக்கு மாறி வலுவுடன் செயல்படத் தொடங்கியது.
புஷ் நிர்வாகத்திடமிருந்து கடும் நெருக்குதல் கொடுக்கப்பட்டதால்தான் லஷ்கர் அமைப்பின் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இன்னும் தனது பக்கத் தவறை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ளாமல் உள்ளது. உண்மையை ஏற்க மறுக்கிறது. காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தீவிரமாக இருக்கிறது என்பது உண்மையானால், அதில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினால் இவற்றையெல்லாம் அது முதலில் விட வேண்டும் என்று தலையங்கம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications