பந்தப்புளி கோவில் முதல்வர் உத்தரவால் திறப்பு
சங்கரன்கோவில்: சர்ச்சைக்குரிய சங்கரன்கோவில், பந்தப்புளி மாரியம்மன் கோவிலை திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதையடுத்து கோவில் இன்று திறக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவிலில் தலித் மக்கள் நுழைய ஒரு பிரிவு சமுதாயத்தினர் அனுமதி மறுத்து வந்தனர்.
இதையடுத்து சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் தலித்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், தலித்கள் உள்பட அனைத்துச் சமூகத்தினரும் வழிபட உரிமை உண்டு என நான்கு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது.
இருப்பினும் கோர்ட் உத்தரவின்படி தலித்கள் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பிரச்சினை வெடித்ததால் கோவிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி விட்டது.
இதையடுத்து கோவிலை திறக்க வேண்டும், தலித்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரி தலித் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போராடி வந்தன.
நீதிமன்றத் தீர்ப்பு தலித் மக்களுக்கு சாதகமாக வெளிவந்த நிலையிலும், அத்தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காத நிலையிலும், மேல் முறையீட்டைச் சுட்டிக் காட்டி கோவிலைப் பூட்டுவதும், தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முடி யாதபடி 144 தடை உத்தரவு போடு வது, அரசு நிர்வாகமே சட்ட விரோத மாக செயல்படும் நிலையாகும் என்று கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவிலைத் திறக்க தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி கோவிலைத் திறக்குமாறும், அனைத்து மக்களையும் கோவிலில் சென்று வழிபட நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ், தீண்டாமை ஒழிப்புப் பிரிவு ஐஜி பிரதீபன் ஆகியோர் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.
பின்னர் தலித்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஒரு பிரிவைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதையடுத்து அங்கு அமைதி திரும்பியது.
கோவில் திறப்பையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.