ராஜபாளையம் நகராட்சி கலைப்பு உத்தரவுக்கு தடை
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியை தமிழக அரசு கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜபாளையம் நகராட்சியில் அதன் தலைவர் (திமுகவைச் சேர்ந்தவர்), மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் முற்றியதால், நகராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனால் ராஜபாளையம் நகராட்சியை கடந்த அக்டோபர் மாதம் 15 ம் தேதி அன்று தமிழக அரசு கலைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தேர்ந்து எடுக்கப்பட்ட நகராட்சி கவுன்சில் தொடர்ந்து செயல்படவும், தமிழக அரசின் கலைப்பு உத்தரவை ரத்து செய்யக் கோரியும் நகராட்சி துணைத் தலைவராக இருந்த மணிகண்டராஜா சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுகுணா, அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தார். பின்னர் வழக்கு நீதிபதி வெங்கட்ராமனிடம் சென்றது.
அப்போது அதிமுக சார்பில் வழக்கீல் மனோஜ் பாண்டியன் ஆஜரானார்.
விவாதத்திற்குப் பின்னர் அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறுகையில், நகராட்சியில் உள்ள பெரும்பான்மையான கவுன்சிலர்களின் கருத்தை நகராட்சி முதன்மைச் செயலாளர் கருத்தில் கொள்ளத் தவறி விட்டார். அவர்களது விளக்கத்தை அவர் பரிசீலிக்கவில்லை.
நகராட்சித் தலைவர் தனது கடமையை செய்யத் தவறியதால் அவர் மீது சட்டப்படி நகராட்சி முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நகராட்சித் தலைவர் கடமையாற்றுவதிலிருந்து தவறியதற்காக, எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு செயலாளர் விளக்கம் அளிக்கவில்லை.
மனுதாரர் உள்பட பெரும்பாலான கவுன்சிலர்கள் நகராட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் அதை நகராட்சித் தலைவர் பரிசீலிக்கவில்லை. ஆகவே மனுதாரர் இந்த வழக்கைத் தொடர்ந்ததில் எந்த்த தவறும் இல்லை.
நகராட்சிக் கூட்டத்தைக் கூட்ட நகராட்சித் தலைவருக்கு ஆர்வம் இல்லை. அதற்கு என்ன காரணம் என்பது அவருக்குத்தான் தெரியும். மேற்கண்ட காரணங்களினால் நகராட்சியைக் கலைக்க அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கவுன்சிலர்கள் அளித்த விளக்கத்தை அரசு செயலாளர் பரிசீலித்து இனி உத்தரவு பிறப்பிக்கலாம்.
நலத் திட்டங்களை தங்களுக்கு செய்வார்கள் என்றும், தங்களுக்குப் பாதுகாவலர்களாக செயல்படுவார்கள் என்றும் வாக்களித்து கவுன்சிலர்களை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாமல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் மோதல் நடப்பது வருத்தத்திற்குரியது. இனிமேலாவது கவுன்சிலர்கள், பொதுமக்களின் நலன்களை முக்கியமாக கருதுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் நீதிபதி வெங்கட்ராமன்.












Click it and Unblock the Notifications