விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள்- மாநில அரசுகளுக்கு உத்தரவு
டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்த உத்தரவை அனைத்து மாநில அரசுகள், விமான நிலைய நிர்வாகங்கள், பாதுகாப்பு அமைப்புகளுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், அனைத்து விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த சுற்றறிக்கையை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அனுப்பி வைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் மாதவன் நம்பியார், அனைத்து மாநில அரசுகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 340 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள பல விமான ஓடுபாதைகள் 2ம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பயணிகளின் உடமைகள் முழு அளவில் சோதனையிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முழுமையான சோதனைக்குப் பின்னரே யாரையும் விமானத்தில் ஏற அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விமானத்தில் பாதுகாப்புக்காக செல்லும் அதிரடிப்படையினரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பரவலாக பல விமானங்களிலும் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் செல்லும் விமானங்களில் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.
இதுதவிர ஹெலிகாப்டர்களின் போக்குவரத்தையும் விரைவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முறைப்படுத்தவுள்ளது.












Click it and Unblock the Notifications