களை கட்டும் திருமங்கலம் - அனல் பறக்கும் பிரசாரம்
திருமங்கலம்: திருமங்கலம் இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் விறுவிறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தொகுதி களை கட்டி வருகிறது.
திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக, மும்முனைப் போட்டியில் உள்ளனர்.
மூன்று கட்சிகளுமே வெற்றியைக் குறி வைத்து குதித்திருப்பதால், தேர்தல் களம் கடும் போட்டியை சந்தித்துள்ளது.
திமுக, அதிமுக வேட்பாளர்களின் பிரசாரத்தில் அணல் பறக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார். அதேபோல திமுக வேட்பாளர் லதா அதியமானும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
திமுக வேட்பாளர் லதாவுடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் திரளாக செல்கின்றனர்.
முதல்வர் கருணாநிதியின் சாதனைகள், திமுக அரசின் சாதனைகள், இந்த ஆட்சியில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவற்றை கூறி ஓட்டு வேட்டையாடி வருகிறேன். அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் லதா.
அதேபோல திமுக அரசின் குறைகளைக் கூறி அதிமுக தரப்பு ஓட்டு வேட்டையாடி வருகிறது.
கரை வேட்டிகள் கூட்டம் - திணறும் திருமங்கலம்
தேர்தல் பிரசாரத்தையொட்டி பல்வேறு கட்சிகளின் சார்பில் ஏராளமான அரசியல்வாதிகள், தொண்டர்கள் திருமங்கலத்தில் குவிந்திருக்கின்றனர்.
மாநில அமைச்சர்கள், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கூட்டம்தான் அதிகமாக உள்ளது. அதேசமயம், தேமுதிகவினர் வழக்கமான முறையில், அமைதியாக, ஆடம்பரம் இல்லாமல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், அழுத்தம் திருத்தமான பிரசாரமாகவும் அவர்களுடையது அமைந்திருக்கிறது.
அரசியல்வாதிகளின் கூட்டம் அலை மோதுவதால் திருமங்கலம் தொகுதி முழுவதும் அமர்க்களாகவும், கூட்டமாகவும் காணப்படுகிறது. ஹோட்டல்களில் அறைகள் அனைத்தும் புக் ஆகி விட்டன.












Click it and Unblock the Notifications