கர்நாடகத்தில் 8 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 8 சட்டசபைத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு சட்டசபையில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக, அதன் பின்னர் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை வலை போட்டு இழுத்தது. இதில் சிக்கி, காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து 4 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தனர்.
இந்த காலியிடங்களுக்கும், உறுப்பினர் ஒருவரின் மறைவால் காலியான ஒரு இடத்திற்கும் சேர்த்து 8 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
இந்தத் தேர்தலில் அமைச்சர்கள் பாலசந்திர ஜராகிஹோலி, ஆனந்த் அஸ்னோதிகர், ஷிவன்ன கெளட நாயக், உமேஷ் கட்டி, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா உள்ளிட்ட 73 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 9500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 தொகுதிகளில் ராஜினாமா செய்த அதே நபர்களே மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். 30ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் அன்றே வெளியாக விடும்.
இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அக்கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்பதால், இந்தத் தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை:
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் 87 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகள் நாளை எணணப்படுகின்றன.
தேர்தலில் இங்கு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை இடையே மும்முனை போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 44 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இதனால் அங்கு மீண்டும் தொங்கு சட்டசபை உருவாகி, ஏதேனும் இரு கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications