வாக்காளர்களுக்குப் பணம்: திமுக - அதிமுக கடும் மோதல்
மதுரை: வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுப்பதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து திருமங்கலத்தில், திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதனால் தொகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இந்த மோதலில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருமங்கலம் இடைத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வருவதாக திமுகவினருக்குத் தகவல் கிடைத்தது.
திருமங்கலத்தில் 4 இடங்களில் இந்த பணப்பட்டுவாடா நடைபெற்றதாகவும், இது குறித்து தகவல் அறிந்ததும் திமுகவினர் அந்த 4 இடங்களுக்கும் சென்று பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் அதிமுகவினரின் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைப் படம் பிடிக்க முயன்ற ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமரா மேன் தாக்கப்பட்டு கேமராவும் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தாங்கள் பணம் கொடுக்க முயன்றதாக கூறுவதை அதிமுக தரப்பு மறுத்துள்ளது. திமுகவினர்தான் பணம் கொடுப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரு தரப்பு சார்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த சம்பவம் காரணமாக திருமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது. வன்முறை மூளாமல் தடுக்க போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications