ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் எழுச்சி பேராபத்தானது - காங்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு கணிசமான வெற்றி கிடைத்திருப்பது மதச்சார்பின்மைக்கு பேராபத்தாகும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், நாட்டில் மதச்சார்பின்மை சுருங்கி வருவதையே பாஜகவின் இந்த வெற்றி காட்டுகிறது.
இது எனக்குக் கவலை அளிக்கிறது. கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்த (காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ப்பு) கசப்பான சம்பவங்களின் விளைவே இது என நான் கருதுகிறேன்.
வளர்ச்சியைப் பலி கொடுத்து விட்டு மதச்சார்பின்மை சுருங்கி வருகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி, ஒட்டு மொத்த நாட்டுக்கும் கவலை அளிக்கும் விஷயமாகும். பாஜகவின் ஒரே குறிக்கோள், மக்களிடையே மதப் பதட்டத்தை ஏற்படுத்துவது மட்டுமே. அவர்களது மதவாத கண்ணோட்டத்தின் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களால் வெறுக்கப்படும் கட்சியாக பாஜக உள்ளது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் முடிவெடுப்பார்கள். தேசிய மற்றும் மதச்சார்பற்ற அடையாளத்துடன் கூடிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்.
அமர்நாத் நில விவகாரம்தான் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறி விட முடியாது என்றார் ஆசாத்.












Click it and Unblock the Notifications