Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய அரசும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கும்: பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

Prabhakaran
கொழும்பு: எமது மக்களை கேடயமாகப் பயன்படுத்தி போரிடுவதாக சிங்கள ராணுவம் கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் வீறு கொண்டெழும்த. எங்களது போராட்டத்தை இந்தியாவும் ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

'லக்பிம நியூஸ்' என்ற சிங்களப் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் பிரபாகரன் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:

கேள்வி: கிளிநொச்சியை ராணுவம் பிடித்துவிட்டதாகவும், புலிகளுக்கு முடிவு நெருங்கி விட்டதாகவும் கூறப்படுவது குறித்து...

பதில்: எமது நெடிய போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறோம். இலங்கை அரசின் ஒருதலைப் பட்சமான பிரச்சாரங்களையும் பார்த்திருக்கிறோம். அவற்றை வெற்றிகரமாக முறியடித்துமிருக்கிறோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் வன்னிப் பரப்புக்கு இடம்பெயர்ந்த போது மீண்டும் எம்மால் பாரம்பரிய ராணுவ அமைப்பாக செயல்படவே முடியாது என்று பிரச்சாரம் செய்தன அரச படைகள். ஆனால் அதற்குப் பிறகுதான் முல்லைத் தீவை மீண்டும் கைப்பற்றினோம். ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3-ஐ வெற்றிகரமாக நடத்தி ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும் நிலப்பரப்புகளை மீட்டோம்.

இப்போதும் கிளிநொச்சியை நாங்கள் விரைவில் இழந்து விடுவோம் என்று இலங்கை அரசு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் அரசுப் படைகளுக்கு புலிகள் ஏற்படுத்தியுள்ள பலத்த சேதமே சொல்லும் எமது இயக்கத்தின் எதிர்கால வெற்றிகள் எப்படிப்பட்டவை என்று.

கேள்வி: கிளிநொச்சியைப் பிடிப்பதாக ராஜபக்சே பகல் கனவு காணுவதாகக் கூறியுள்ளீர்கள். அதேநேரம் கிளிநொச்சியில் மிகுந்த நெருக்கடியுள்ளதாகவும், மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளவுமில்லை. எது உண்மை?

பதில்: எமது இயக்கம் மக்கள் சார்ந்த அமைப்பு. மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் போராடி வரும் இயக்கம் இது. மக்களின் பலமும் பேராதரவும் எமக்கிருப்பதால்தான் இது சாத்தியமானது. அவர்களின் ஆதரவுதான் எம்மை பெரும் நெருக்கடிகளையும் போர் திணிப்புகளையும் எளிதில் வெற்றி கொள்ள வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழினமும் எம் பின்னால் உள்ளது. எம்மை மனமார ஆதரிக்கிறது. எமது போராட்டத்தின் பின்புல சக்தியாகத் திகழ்வது அவர்கள்தான். கிளிநொச்சி காக்கப்பட வேண்டும் என்பது எமது மக்களின் விருப்பம். அதற்காக அவர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

மக்களின் இந்த பேராதரவைக் கண்டு கோபம் கொண்டுள்ள இலங்கை ராணுவ படைகள் எம் மக்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது. பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி தந்துள்ளது. எமது மக்களுக்கு இந்த உண்மை தெரியும். அதனால்தான் பாதுகாப்பான மறைவிடங்களுக்கு அவர்கள் செல்லத் துவங்கியிருக்கிறார்கள்.

தமிழகம் முழுமையாக ஆதரிக்கிறது

கேள்வி: தங்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகள் ஓழிக்கப்பட்டால் சந்தோஷமே, எனும் எண்ணத்தில் ஈழத் தமிழர்களுக்கு உதவ மறுக்கிறது இந்தியா. தமிழக முதல்வர் கருணாநிதியும் கடைசியில் இந்திய அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து தனது ஈழ ஆதரவுப் பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவின் முழுமையான ஆதரவை நீங்கள் இழந்துவிட்டதைத்தானே இது காட்டுகிறது?

பதில்: இதை நாம் முற்றாக மறுக்கிறோம். தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் வேறுபாடுகளைக் கடந்து ஒருமனதுடன் எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரிக்கிறார்கள். இவர்களில் எந்தத் தலைவரும் எமக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. இன்னமும் பல வடிவங்களில் ஆதரவினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்திய அரசுடன் எங்களது உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான, ராஜாங்க ரீதியான வழிமுறைகளில் இறங்கியுள்ளோம். இந்தச் சூழலில் இந்தியாவின் மத்திய அரசும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இது பலருக்குத் தெரியாது. தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும் என்று நம்புகிறேன்.

கேள்வி: கிழக்குப் பகுதியை விடுவிக்க இலங்கை ராணுவம் முயற்சி எடுத்த போது வாயைத் திறக்காத கருணாநிதியும் மற்ற தலைவர்களும், திடீரென்று கிளிநொச்சி மக்களைப் பற்றி பேசி வருவது ஏன்? சரிந்து கிடக்கும் தங்கள் அரசியல் இமேஜைத் தூக்கி நிறுத்தி ஆதாயம் தேடும் முயற்சிதானே... இந்தக் கோணத்தில் நீங்கள் பார்க்கவில்லையா?

பதில்: தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள், மனமார. காரணம் எமது மக்கள் மீது அவர்களுக்குள்ள உண்மையான அன்பு. எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் அவர்கள் எம்மை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.

கேள்வி: கருணாவும் பிள்ளையனும் அரசில் இணைந்து பதவிகளைப் பெற்று கிழக்குப் பகுதி வளர்ச்சிக்குப் பாடுபடுவதன் மூலம், விடுதலைப் புலிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும், அவர்களுக்கு ஏராளமான மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுவது குறித்து...

பதில்: கிழக்குப் பகுதி மக்களின் பூரண ஆதரவு எமது இயக்கத்துக்குத்தான் உள்ளது. எங்கள் அரசியல் பிரிவு அங்கே இன்னமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிழக்குப் பகுதி மக்களை இன்னமும் அவர்கள்தான் காத்து வருகிறார்கள். கருணாவையும் அவர் சார்ந்த சிலரையும் சிங்கள அரசு தனது ராணுவத்தைக் கொண்டு காப்பாற்றி வருகிறது. அவர்களை முன்னிறுத்தி பொய்ப் பிரச்சாரம் நடத்தி வருகிறது. அதற்குத்தான் அவர்கள் உதவுகிறார்கள். இதுவே களத்தின் உண்மை நிலை.

கேள்வி: விடுதலைப் புலிகளின் படை பலம் அப்படியே இருப்பதாக நீங்கள் சமீபத்தில் கூறியிருந்தீர்கள். ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிய வெற்றிகள் எதையும் சாதிக்கவில்லை. இதனை அரசின் பொய்ப் பிரச்சாரம் என நீங்கள் கூறினாலும், சர்வதேச மீடியா புலிகள் பலவீனமடைந்துள்ளதாகவே கூறி வருகின்றன. உங்கள் கருத்து?

பதில்: நாங்கள் பலவீனமடைந்து விடவில்லை. மக்களே எங்கள் பலம். கிள்நொச்சியின் சமீப காலப் போர் எங்களின் பலத்தை வெளிப்படுத்தியிருக்கும். எங்களின் எதிர்கால வெற்றிகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும், எங்கள் நிஜ பலத்தையும் காட்டும்.

மண்ணை விட்டு ஓட மாட்டேன்

கேள்வி: நீங்கள் தஞ்சமடைய பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்டு வருவதாகவும், எரித்தீரியா அல்லது தென் ஆப்ரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்றும் வதந்தி உலா வருகிறது. உங்கள் சகாக்களை விட்டுச் சென்று விடுவீர்களா?

பதில்: இது அப்பட்டமான பொய். இலங்கை அரசின் மீடியா செய்யும் திட்டமிட்ட பிரச்சாரம். எமது மண்ணைவிட்டு ஓடுபவர்கள் அல்ல நாங்கள். எமது மக்களின் உரிமைகளை மீட்க இறுதி வரைப் போராடுவோம்.

கேள்வி: இன்னும் எவ்வளவு விடுதலைப் புலிகள் உங்கள் படையில் உள்ளனர்?

பதில்: பல பல ஆயிரங்கள்...

கேள்வி: உங்களுக்கு வயதாகிக்கொண்ட வருகிறது.தமிழ் ஈழம் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதாகவும் தெரியவில்லை. இதுபற்றி..

பதில்: எங்களுடையது சுதந்திரப் போர். இது ஒரு தேசிய இயக்கம். அதற்கு கால வரையறை கிடையாது என்பது எமக்கும் புரிந்திருக்கிறது.

கேள்வி: ஆனால் இந்தப் போரால் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்களே... ஆயுதங்களைப் போட்டுவிட்டு சமாதானத்துக்கு நீங்கள் முன்வராத்து ஏன்...

ஆண்டுக்கணக்கில் துயருறும் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் அந்த வழியிலும் நீங்கள் முயற்சிக்கலாமே...

பதில்: எமது மக்களின் அரசியல் உரிமைகள் எட்டப்படும்வரை போராட்டம் தொடரும். மிரட்டல் அல்லது பேரங்கள் மூலமாக இந்த புனிதப் போரை யாரும் நசுக்கிவிட முடியாது. எமது மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அனைத்துவித தியாகங்களையும் செய்து விட்டார்கள்.

ஒவ்வொருவரும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நிச்சயம் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கேள்வி: தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம், மகிந்த ராஜபக்சேவை அதிரபராகத் தேர்வு செய்ய உதவியதை நினைத்து இப்போது வருந்துகிறீர்களா... கடந்த முறை இருந்த UNP அரசு விடுதலைப் புலிகளை இந்த அளவு மோசமாகத் தாக்கவில்லையே...

பதில்: தேர்தலைப் புறக்கணித்தது மக்களின் சொந்த விருப்பம். அவர்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதுகுறித்து தவறான பிரச்சாரம் நடந்து வருகிறது.

கேள்வி: உங்கள் பயங்கரவாதத்தைப் பார்த்து சர்வதேச சமுதாயம் உங்களைப் புறக்கணித்து வருகிறது. அனைத்து மட்டங்களிலும் ஆதரவை இழப்பது சரியா?

பதில்: இதில் உண்மையில்லை. இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு இங்குள்ள கள நிலவரம் புரியத் துவங்கி இருக்கிறது. இது ஒரு உரிமைப் போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. முன்னெடுத்துச் செல்லவுமில்லை.

இலங்கை அரச படைகளின் விமான குண்டு வீச்சும், அநியாய பொருளாதாரத் தடைகளும் பயங்கரவாதமா...அல்லது நியாயமான உரிமைகளைப் பெறப் போராடும் தமிழ் மக்கள் செய்வது பயங்கரவாதமா?

தயவு செய்து இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகத்தையும் சிங்கள மக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: சமீபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவைக் கொன்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இது பழிவாங்கலா அல்லது இந்தக் கொலையில் அரசுக்கு பங்கிருப்பதாகக் காட்டி மக்களைக் குழப்பும் முயற்சியா?

பதில்: இந்தக் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மை. சமீப காலமாக இலங்கை அரசுக்கும் பெரேராவுக்கும் தீவிரமான கருத்து மோதல்கள் இருந்தன. அது சிங்கள இனத்துக்கே நன்கு தெரியும். இந்த மாதிரி அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள மக்களே பொங்கியெழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பெரும் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே?

பதில்: எங்கள் இயக்கம் நேர்மையானது. சரியான காரணங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. எங்களை யாரும் விலை பேச முடியாது. லஞ்சம் கொடுத்து வாங்கவும் முடியாது.

கேள்வி: சின்னச்சின்ன தாக்குதலைத் தவிர பெரிதாக எதையும் உங்களின் விமானப்படை சாதிக்கவில்லையே... அல்லது இம்மாதிரி விமானப்படை உருவாவதை இந்தியா விரும்பாது என்பதால் அமைதி காக்கிறீர்களா?

பதில்: மீண்டும் சொல்கிறேன்... இலங்கை அரச படைகள்தான் ராணுவத் தாக்குதலை தமிழர்கள் பிரதேசங்களில் நடத்தின. இந்தப் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்கிரம் காட்டுவது அவர்கள்தான். நாங்கள் தற்காப்பு நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறோம்.

மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டும்தான் எமது கடற்படையும், விமானப் படையும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி யாரும் எமக்கு மிரட்டல் விடுக்கவில்லை. மகிந்த ராஜபக்சேவின் படைகள்தான் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் இறங்கியுள்ளன.

கேள்வி: உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் யார்? உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன?

பதில்: என்னை தங்களின் தேசியத் தலைவராகவும் எமது படையின் தலைவராகவும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு இதைமட்டும்தான் சொல்ல முடியும்.

கேள்வி: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதாக ராணுவம் கூறுவது பொய்ப் பிரச்சாரம் என்கிறீர்கள். அப்படியானால் உண்மை நிலவரங்களை வெளியுலகுக்குச் சொல்வதிலும் உங்கள் தரப்பு தோற்றுவிட்டதா... அனைத்து மட்டங்களிலும் இந்தப் பின்னடைவு ஏன்?

பதில்: உங்கள் கணிப்பு தவறானது. அனைத்து மட்டங்களிலும், அரசியல், ராணுவம் மற்றும் ராஜாங்க உறவுகளை வளர்த்தல் போன்றவற்றில் எமது இயக்கம் வெற்றி பெற்றுள்ளது.

கேள்வி: சிங்கள மக்கள் இரு விஷயங்களில் தெளிவாக உள்ளனர். தனி ஈழம் என்பதைத் தவிர வேறு எந்த தீர்வுக்கும் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அடுத்து நீங்கள் தொடர்ந்து அப்பாவி சிங்களர்களைத் தாக்குவதையும் நிறுத்த மாட்டீர்கள்... இல்லாவிட்டால் தெற்கில் தொடர்ந்து பஸ்களில் குண்டு வைத்து சிங்கள மக்களை நீங்கள் கொன்றிருக்க மாட்டீர்கள்...

பதில்: தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கவும், அவர்களின் சுதந்திரத்துக்காகவும்தான் எமது இயக்கம் பாடுபட்டு வருகிறது. நாங்கள் இனவாதம் பேசுவதில்லை. சிங்கள மக்களைக் கொல்வதும் எங்கள் நோக்கமில்லை. எங்கள் போராட்டத்துக்கு சிங்கள மக்களின் ஆதரவையும் கேட்கிறோம். இதை சிங்களர்களே இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். எமக்கு ஆதரவாக செயல்படவும் சிங்களர்கள் தயார்தான். ஆனால் இந்த இலங்கை அரசின் அடக்குமுறைக்குப் பயந்து அவர்கள் அமைதி காக்கிறார்கள்.

கேள்வி: அம்னெஸ்டி போன்ற அமைப்புகள், நீங்கள் அப்பாவி மக்களைக் கேடயமாக்கிப் போரிட்டு வருவதாகக் குறை சொல்லியுள்ளதே...

பதில்: இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். மக்களை ஒருபோதும் கேடயமாகப் பயன்படுத்தி நாங்கள் போரிடவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களின் உரிமைகளுக்காகத்தானே போரிட்டுக் கொண்டிருக்கிறோம்...

கேள்வி: இலங்கையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1978 முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடுமையாக முயற்சித்தும் தோற்று வருகின்றன. காரணம் இம்மாதிரி அரசுகளுக்குள்ள கால வரையறை. ஆனால் தீவிரவாதத்துக்கு இம்மாதிரி கால வரையறை கிடையாது. அதனால்தான் போர் இன்னும் நீடித்து வருகிறது... சரிதானே?

பதில்: மக்களால் தேரந்தெடுக்கப்பட்ட அரசுகள் முழுமையாக நிலைமையைப் புரிந்து தீர்வு காண முற்பட்டிருந்தால் இந்த தேசத்தின் பொருளாதாரம் இப்படி மோதசமாகியிருக்காது. அதிகாரத்துக்கு வரும் அசியல் கட்சிகள் தங்கள் பழைய கோட்பாடுகளை தூரப்போட்டுவிட்டு, தமிழ் தேசியத்தின் கேள்விகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி கண்டிருந்தால் பொருளாதாரம் இந்தளவு மோசமாகி இருக்காதே... ஆக பிரச்சினைக்குக் காரணம் அவர்கள்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+