''கிரீமிலேயரால் பாதிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்''
சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை' நீக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மெமோரியல் ஹால் அருகே நடந்த இந்தப் போராட்டத்தையடுத்து இவர்கள் கைதாகினர். முன்னதாக நிருபர்களிடம் பேசிய வீரமணி,
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சமூக நீதி அண்மைகாலமாக மீறப்பட்டு வருகிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை உயர் ஜாதியினரை கொண்டு நிரப்புவதற்காக பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பிற்படுத்தப்பட்ட விவசாயிகள், வணிகர்கள் குடும்பத்தினர் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் வருமானம் ஆண்டிற்காண்டு மாறுபடுவதால் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பொருளாதாரம் நிலையாக இல்லை.
இதனால் ஓராண்டில் இவர்கள் கிரீமிலேயரின் கீழ் வந்துவிட்டால் அடுத்த ஆண்டில் வருமானம் குறைந்தாலும் அதே கிரீமிலேயர் அளவுகோலில் வைக்கப்பட்டு இட ஒதுக்கீட்டை இழக்கின்றனர்.
இதனால் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரை உடனடியாக நீக்க வேண்டும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு பிரதமருக்கும், சட்டத்துறைக்கும் கடிதம் எழுத வேண்டும்.
இந்த பொருளாதார அளவுகோலை நீக்கக் கோரி இன்னும் சில மாதங்களில் டெல்லியில் பிற்படுத்தப்பட்ட மக்களை கொண்டு மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்றார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.