ராணுவ தளபதியுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
டெல்லி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
சிதம்பரத்துடன் நடந்த இந்த சந்திப்பின்போது உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை குறித்து தீபக் கபூர் எடுத்துரைத்தார். மேலும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் காணப்படும் ஓட்டைகள் குறித்தும் அவர் விளக்கியதாக தெரிகிறது.
மேலும், பாதுகாப்புப் படையினர் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீபக் கபூர் விளக்கியதாக தெரிகிறது.
உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதல் முப்படைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு ஏஜென்சிகள் உள்ளிட்டோருடன் ப.சிதம்பரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு பாதுகாப்பில் அனைவரும் இணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவுடன் சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அப்போது கடலோரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசித்தார்.
அதேபோல கடலோரப் பாதுகாப்புப் படை கமாண்டர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications