யாழ்ப்பாணத்தில் தமிழில் பேசிய ராஜபக்சே
கொழும்பு: யாழ்ப்பாணம் தமிழர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, வீடியோவில் ஆற்றிய உரை ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பேச்சு தமிழில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாணத்தின் எதிர்கால மனங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் ராஜபக்சேவின் தமிழ் உரை ஒளிபரப்பானது. வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த உரையை வணக்கம் என்று கூறி ராஜபக்சே ஆரம்பித்து தொடர்ந்த தமிழிலேயே பேசியுள்ளார்.
ராஜபக்சே கூறுகையில், தீவிரவாதத்தால் நீங்கள் இழந்த அனைத்தும் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களது சகோதர, சகோதரிகளுடன், குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வசிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
கிழக்கில் புதிய உதயம் புலரும்போது வடக்கில் புதிய வாழ்வு மலரும்.
கடந்த கால கசப்புணர்வுகளை, கசப்பான அனுபவங்களை நாம் மறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
கடந்த காலங்களில் சிங்களவர்கள் நிறைந்துள்ள தென் பகுதி மக்களும், தமிழ் மக்கள் நிறைந்துள்ள வட பகுதி மக்களும் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தனர். வடக்கில் வசித்தவர்கள் வியாபாரம் நிமித்தமாக கொழும்புக்கு வந்தனர். தெற்கிலிருந்து பலர் பேக்கரிகள், ஹோட்டல்களை வடக்கில் ஆரம்பித்தனர்.
ஆரம்ப கால தமிழர் தலைவர்களான பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் தமிழைப் போலவே சிங்களத்தையும் நேசித்தனர். அனைத்துப் பிரிவினரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை ராமநாதன் வலியுறுத்தினார்.
தெற்கில் வசிக்கும் மக்கள் வடக்கில் வசிக்கும் மக்களின் தொழில் திறமையை மதித்தனர், பாராட்டினர். அதேபோல தெற்கிலிருந்து வடக்குக்கு வந்த மக்களை அங்கிருந்தவர்கள் நட்புடன் வரவேற்றனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தலைவர்தான், ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுபட வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர். பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் ஆங்கிலேய ஆதிக்கம்தான் நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார்.
வடக்கு, தெற்கு என பிரிந்து நாம் வாழ முடியாது. ஒரே நாடாக, ஒரே மக்களாக நாம் வாழ வேண்டும் என்றார் ராஜபக்சே.
முன்னதாக நேற்று இரவு இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர்களுடன் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த ஆண்டில், விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள். இடம் பெயர்ந்த மக்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கே திரும்பும் வாய்ப்பு வழங்கப்படும்.
வடக்கில் அடுத்த ஆண்டு நாங்கள் தேர்தல் நடத்த விரும்புகிறோம். மக்கள் அனைவரும் தத்தமது இடங்களுக்குத் திரும்பிய பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
அடுத்த ஆண்டுக்குள் விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டு விடுவார்கள் என நம்புகிறேன்.
போர் என்று வந்தால் கண்டிப்பாக இழப்புகள் இருக்கத்தான் செய்யும். அதை நாம் தவிர்க்க முடியாது. எங்களுக்கும் அப்படித்தான் என்றார் ராஜபக்சே.
முன்பு ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தியபோதும் தமிழில் பேசினார் ராஜபக்சே என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications