அரசின் 'பவரை கட்' செய்ய மக்கள் தயார்-வைகோ

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் புகார் மனு கொடுத்த பின் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
திருமங்கலம் இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை நடக்கிறது. வன்முறையாளர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். திமுகவினர் நடிகர் ராமராஜனின் கார் உள்பட பல கார்களை தாக்கியுள்ளனர்.
அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிமுக தேர்தல் பொறுப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆலங்குளத்தில் பிரச்சாரம் நடத்திவிட்டுத் திரும்பிய அதிமுக எம்.எல்.ஏ. சாமியை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். மதுரை சரக டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் எஸ்.பி. மனோகரன், டி.எஸ்.பி. ஷாஜகான், ஏ.டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர்.
எனவே போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் இவர்களை இடைக்கால பணி நீக்கம் செய்ய வேண்டும்.
திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பது நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றியும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
அதிமுகவினர் மீது கைது நடிவடிக்கை கூடாது இங்கு துணை ராணுவத்தை நிறுத்த வேண்டும்.
அதே நேரத்தில் அதிமுகவினரை கைது செய்தால் பயந்து போய்விட மாட்டோம். கைது செய்யப்பட்டால் மக்கள் சக்தியை திரட்டுவோம் என்றார்.
அதிமுக வேட்பாளரை கடத்தி கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தனக்கு நம்பகமான தகவல் வந்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே குற்றச்சாட்டை வைகோவும் கூறியுள்ளார்.
இந் நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ சாமியை சந்தித்து ஆறுதல் கூறிய வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக போலீசார் மனித உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ. சாமி என்னுடன் ஆலங்குளம் பகுதியில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பி கொண்டு இருந்தார். நாங்கள் மாற்று பாதை வழியாக சென்றோம். அவர் எலியார்பத்தி வழியாக செல்வதை வயர்லஸ் மூலம் தகவல் தெரிவித்து போலீசார் அவரை மடக்கி தாக்கி உள்ளனர்.
தான் ஒரு எம்.எல்.ஏ. என்று சொன்ன பிறகும், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீசார் அவரை மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். பொறுப்புள்ள ஐ.பி.எஸ். அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.
2 போலீஸ் வாகனங்களை அவர்களே தாக்கிக் கொண்டு நாடகமாடியுள்ளனர். டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. மனோகரன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
தோல்வி பயத்தால் திமுக வன்முறையை ஏவி விடுகிறது. சாமி பிரசாரம் செய்த பகுதியில் அதிமுகவுக்கு அதிக செல்வாக்கு இருந்ததால் அதை பொறுக்க முடியாமல் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வன்முறையாளர்களை கைது செய்யாமல் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது.
ஜம்மு-காஷ்மீரில் கூட தேர்தல் சுமூகமாக நடந்தது என்றும், அதைவிட மோசமான நிலை திருமங்கலத்தில் நடந்துள்ளதாக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருப்பது தமிழக அரசுக்கு இழுக்கு.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு ஆகியவற்றால் அல்லல்படும் பொதுமக்கள் இந்த அரசின் பவரை கட் பண்ண தயாராகி விட்டார்கள் என்றார் வைகோ.
பொய் வழக்கு-மாஜி பி.எச்.பாண்டியன்:
இதற்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் ஆகியோர் கூறுகையில்,
நாங்கள் நேற்று திருமங்கலம் கோர்ட்டில் சாமி எம்.எல்.ஏ. வழக்கில் ஆஜராவதற்காக நின்று கொண்டிருந்தோம். ஆனால் அதே நேரத்தில் சிந்துபட்டி எல்கையில் நாங்கள் வெடிகுண்டை வீசி திமுக நிர்வாகியை கொலை செய்ய முயன்றதாக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமங்கலத்தில் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடக்குமா என்பதே எங்களுக்கு சந்தேகமாக உள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications