ஓ.பி கைதாவாரா?-பிஎச்.பாண்டியன் மீது 'குண்டு' வழக்கு
மதுரை: அதிமுகவினரால் போலீஸ் வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் கைதாகலாம் என்று கூறப்படுகிரது.
மேலும் திமுக நிர்வாகியை ஆயுதங்களை காட்டியும், வெடிகுண்டு வீசியும் கொல்வோம் என மிரட்டியதாக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் உள்பட 6 அதிமுகவினர் மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்காக பிரச்சாரம் செய்ய வந்த மேலூர் அதிமுக எம்.எல்.ஏ. சாமி மற்றும் அவருடன் வந்தவர்களின் கார்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்போது போலீஸ் வாகனங்களை அதிமுகவினர் தாக்கி உடைத்தனர். போலீசாரையும் சோதனை செய்ய விடாமல் தடுத்தனர்.
இந்த மோதல் குறித்து கேள்விப்பட்டு அங்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து எம்.எல்.ஏ. சாமி உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், முன்னாள் எம்.பி. தங்கதமிழ்செல்வன் ஆகியோர் மீதும்போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல், கலவரத்தை தூண்டுதல், கொலை முயற்சி, பொது சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே அவர்களும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து எஸ்பி மனோகரன் கூறுகையில்,
வன்முறையில் ஈடுபட்டயாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு இல்லாமல் கைது செய்யப்படுவார்கள். நேற்றைய மோதல் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனி போலீஸ் படையினர் விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றார்.
'குண்டு': பி.எச்.பாண்டியன்-தளவாய் மீது வழக்கு:
இதற்கிடையே திமுக நிர்வாகியை ஆயுதங்களை காட்டி மிரட்யதாகவும், வெடிகுண்டுக வீசியும் கொல்வோம் என மிரட்டியதாகவும் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் உள்பட 6 அதிமுகவினர் மீது புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி தாலுகா சொக்கதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம் இது தொடர்பாக சிந்துபட்டி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில்,
திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து நான் திருமங்கலத்தை அடுத்த பன்னீர்குண்டு கிராமத்தில் தேர்தல் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி கொண்டு இருந்தேன்.
அப்போது முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மற்றும் அதிமுகவினர் என்னை வழிமறித்து, இங்கு வந்து நீ எப்படி தேர்தல் பணி செய்யலாம் என்று கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி மிரட்டினர்.
மேலும் இந்த இடத்தை விட்டு ஓடாவிட்டால் வெடிகுண்டை வீசி கொலை செய்து விடுவோம் என்று வெடிகுண்டையும் காட்டி மிரட்டினர் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சிந்துபட்டி போலீசார் பி.எச். பாண்டியன், தளவாய்சுந்தரம், அதிமுக கிளைச் செயலாளர் காசி உள்பட 6 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications