தேர்தல் மோதல் எதிரொலி மதுரை சரக டிஐஜி, எஸ்.பி அதிரடி மாற்றம்

திருமங்கலம் தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக திமுகவினர் புகார் எழுப்பினர். இதுதொடர்பாக 14 அதிமுகவனரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. ஏராளமான வாகனங்கள் தாக்கப்பட்டன.
மேலும், அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் மற்றும் அதிமுகவினரின் கார்கள் தாக்கப்பட்டன. இதுகுறித்து விசாரிக்க வந்த மேலூர் அதிமுக எம்.எல்.ஏ சாமியை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் போலீஸார் துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.
திமுகவினரின் தாக்குதலில் காயமடைந்த அதிமுகவினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல், வன்முறை தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக வேட்பாளரைக் கொல்ல சதி நடப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். மேலும், வன்முறை தொடர்பாக திமுக, அதிமுக சார்பில் சரமாரியாக புகார்களும் கூறப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, திருமங்கலம் இடைத் தேர்தல் க ளத்தில் பல தவறுகள் நடப்பதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். காவல்துறை முறையாக செயல்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்த நிலையில், திருமங்கலம் தேர்தல் வன்முறை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அவர் அறிக்கை அனுப்பினார்.
இதன் அடிப்படையில் நேற்று திடீரென டிஐஜி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. மனோகர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அந்தப் பதவிகளுக்கு வேறு அதிகாரிகளை நியமிக்க தலா 3 பேர் கொண்ட பட்டியலை அனுப்பி வைக்கும்படியும் அது மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications