கலாச்சாரத்தை அழிக்கிறார் சோனியா- சிங்கால்
சென்னை: இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் பணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார் என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பயங்கரவாதம் நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிய தைரியமான, உறுதிமிக்க தேசத் தலைவர்கள் தேவை.
பலவீனமான, கோழை அரசியல்வாதிகளால் இதை சாதிக்க முடியாது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உதவியுடன் செயல்படும், சிமி முதலான அமைப்புகளின் துணையுடன் சிலர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து தீவிரவாதம் என்ற இல்லாத ஒரு புதிய வார்த்தையை சோனியா கண்டுபிடித்துள்ளார். இந்த நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அழிக்கும் பணியில் சோனியா ஈடுபட்டுள்ளார்.
பங்களாதேசிலிருந்து ஊடுருவியுள்ள மூன்று கோடி பேருக்கு அடி பணிந்து, அவர்களை நம் குடிமக்களாக அங்கீகாரம் செய்ய முன்வரும் அரசியல்வாதிகள் அரசியலை விட்டு விலகுவது நல்லது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுடனான ராஜீய உறவுகளை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும், அந்த நாடுகளில் செயல்படும் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் தர்ம யுத்தம் புரிய, ஒரு அர்ஜுனன் இப்போது தேவையாய் இருக்கிறான். இம் மாதம் 28ம் தேதி, மும்பையில் சாதுக்கள் மாநாடு நடக்கிறது என்றார் சிங்கால்.