பாக். ராணுவ தளபதி-சர்தாரி அவசர ஆலோசனை
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிராதத் தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளின் நிர்ப்பந்தம் அதிகரித்து வரும் பின்னணியில், ராணுவ தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானியுடன், அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று நடந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இருப்பினும் பாகிஸ்தானின் டான் டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பதட்டத்தைத் தணிக்க இந்தியா சில திட்டங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்திருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் சம்மதிக்க வேண்டும் எனவும் அந்த செய்தி கூறுகிறது.
இதுகுறித்து கயானியுடன் சர்தாரி முக்கியமாக ஆலோசித்ததாக தெரிகிறது.
நேற்றுதான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை மும்பைத் தாக்குதலைத் திட்டமிட்டதாகவும், அந்த அமைப்பின் லக்வியும், ஜரார் ஷாவும், இதை ஒத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பான வலுவான ஆதாரத்தை அமெரிக்காவும் பாகிஸ்தானிடம் அளித்துள்ளது.
இதையடுத்து லஷ்கரின் தொடர்பை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளவுள்ளது. இந்தப் பின்னணியில்தான் சர்தாரி, கயானி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
நேற்றைய சந்திப்பின்போது தீவிரவாதிளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கயானி விளக்கியதாக தெரிகிறது. மேலும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் அவர் விளக்கியதாக தெரிகிறது.