ஜமாத் உத் தவா-'பேர' மாத்து.. ஏமாத்து!
டெல்லி: ஜமாத் உத் தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளதால் அதன் பெயரை டெஹ்ரீக் இ ஹர்மத் இ ரஸூல் (கடவுளின் பெருமையைக் காக்கும் இயக்கம்) என்று மாற்ற லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
7 ஆண்டுகளுக்கு முன்பு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இதையடுத்து தனது அமைப்பின் பெயரை ஜமாத் உத் தவா என்று மாற்றிக் கொண்டு செயல்பட்டு வந்தது லஷ்கர் இ தொய்பா.
இந்த நிலையில் மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது ஜமாத் உத் தவா என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்கா கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து அந்த அமைப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்தது.
இதைத் தொடர்ந்து தனது அமைப்பின் பெயரை டெஹ்ரீக் இ ஹர்மத் இ ரஸூல் என்று மாற்ற லஷ்கர் திட்டமிட்டுள்ளதாம்.
இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடையிலிருந்து தப்ப அது திட்டமிட்டுள்ளதாம். பெயரை மாற்றிக் கொண்டு புதிய அமைப்பாக செயல்படுவதன் மூலம் தொடர்ந்து பழைய படி சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது அதன் திட்டம்.
சமீபத்தில் ஜமாத் உத் தவா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் டெஹ்ரீக் .. பேனரில்தான் ஒரு பேரணியை நடத்தினர். இதன் மூலம் புதிய பெயருக்கு மாற ஜமாத் திட்டமிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு 1990ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் தொடங்கப்பட்டது. அதை நிறுவியவர் சயீத். பாகிஸ்தான் கெளரவத்துடனும், வளத்துடனும் வாழ ஜனநாயகப் பாதை சரிவராது, ஜிஹாத் மட்டுமே பாகிஸ்தானை மேம்படுத்த உதவும் என சயீத் தொடர்ந்து முழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.