ஜாலிக்காக திருட்டில் ஈடுபட்ட பெண் என்ஜீனியர் கைது
சென்னை: நல்ல வேலையில் இருந்தும் கூட ஜாலிக்காக கிரெடிட் கார்டுகளைத் திருடி பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் என்ஜீனியர் கைதாகியுள்ளார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலட்சுமி சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் ஒரு விடுதியில், பேயிங் கெஸ்டாக தங்கியுள்ளார்.
நேற்று காலை, இவரது கைப்பையில் வைத்திருந்த இரண்டு கிரெடிட் கார்டுகளை காணவில்லை. ஒரு கார்டு, ஸ்டான்டர்ட் சார்ட்டர்டு வங்கி கார்டாகும். மற்றொன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியினுடையது.
உடனடியாக, ஸ்டான்டர்ட் சார்ட்டர்டு வங்கிக்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கும் தனது கிரெடிட் கார்டுகள் காணாமல் போனது குறித்து தகவல் கொடுத்து, அவற்றை முடக்கி வைக்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதற்குள் அந்த இரு கார்டுகள் மூலம், தலா ரூ.7,500 வீதம் ரூ. 15,000க்கு, சென்னை அமைந்தகரையில் உள்ள பிரவீன் ஜூவல்லரி என்ற நகைக் கடையில் நகைகள் வாங்கப்பட்டிருந்தன.
உறவினர் ஒருவர் உதவியோடு நகைக்கடையை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் மகாலட்சுமி.
அப்போது, ஒரு பெண் இப்போது எங்கள் கடையில்தான் நகைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று நகைக் கடைக்காரர் பதில் தந்தார்.
இதையடுத்து அந்தப் பெண்ணை எப்படியாவது பேசி அங்கேயே பிடித்து வைக்குமாறு கூறிய மகாலட்சுமி, கடைக்கு விரைந்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணை கடை நிர்வாகிகள் பேச்சு கொடுத்து அங்கேயே இருக்க வைத்தனர். கடைக்கு வந்த மகாலட்சுமி, அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். காரணம், அவர், மகாலட்சுமியுடன் விடுதியில் உடன் தங்கியிருப்பவர் ஆவார்.
திருட்டுத்தனம் வெளிப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெண், விளையாட்டாக திருடி விட்டேன், மன்னித்து விடுமாறு கெஞ்ச ஆரம்பித்தார்.
காலையில் கார்டு காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியுடன் நான் தேடியபோது ஒன்றும் தெரியாதவர் போல என்னிடம் துக்கம் விசாரித்த நீ, அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் மன்னித்திருப்பேன். இப்போது மன்னிப்பே கிடையாது என்று கூறி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பிடிபட்ட பெண்ணின் பெயர் மணிமாலா (28). தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எலக்ட்ரானிக் என்ஜினீயரான இவர் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
தன்னுடன் தங்கியிருக்கும் சக தோழிகளிடம் கிரெடட் கார்டுகள் அதிகம் புழங்குவதைப் பார்த்து அவற்றை திருடும் ஆசை வந்துள்ளது. கார்டுகளைத் திருடி நகை, பிற பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளார். சூளைமேடு, பாண்டி பஜார், திருமங்கலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி கிரெடிட் கார்டுகளை திருடியுள்ளார்.
போலீஸார் விசாரணையின்போது கதறி அழுத மணிமாலா, விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் திருட்டுகளை செய்துவிட்டதாகவும் மன்னித்துவிடுமாறும் கதறினாராம்.