தீவிரவாதத்திற்கு எதிராக எந்த எல்லை வரையும் செல்வோம் - பிரதமர்
டெல்லி: தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயார் என பிரதமர் மன்மோகன் சிங் திடீரென கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் பேசுகையில், தீவிரவாதத்தை வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல இந்தியா தயாராக உள்ளது. ஆயுதங்களை எடுப்பதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.
பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை வேரறுப்பதில் அக்கறை காட்ட வேண்டும். அதற்குரிய பாதையில் அது செல்லும் என நம்புகிறோம்.
அதேபோல, புதிய வங்கதேச அரசு, வங்கதேச மண்ணை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு யாரும் பயன்படுத்துவதை அனுமதிக்காது என்று நம்புகிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை வங்கதேச அரசு எடுக்கும் என நம்புகிறோம்.
மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை, குற்றவாளிகளை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.
தீவிரவாதமும், நக்சலிசமும் பெருகி வருவது கவலை அளிக்கிறது. தீவிரவாதத்துடன் அரசு எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாது.
மும்பை, டெல்லி,அஸ்ஸாம் குண்டுவெடிப்புகள் நமக்குப் பின்னடைவுதான். ஆனால் தீவிரவாதத்தை நாட்டை விட்டு வேரறுக்க எந்த எல்லை வரையும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.
தீவிரவாத அமைப்புகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். ஆயுதங்களுடன் இருப்போரிடம் அரசு பேச முடியாது.ஆயுதங்களால் எதற்கும் தீர்வு காண முடியாது.
ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, இந்திய குடிமக்களாக அவர்கள் வருவார்களேயானால் அவர்களுடன் பேச அரசு தயாராக உள்ளது என்றார் சிங்.












Click it and Unblock the Notifications