எம்.ஜி.ஆர். காலத்தில் முகவரி இல்லாமல் இருந்தது யார்? -விஜயகாந்த் கேள்வி
திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட ஊத்துப்பட்டியில் இன்று காலை விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கினார்.
புளியங்குளம், தேங்கல்பட்டி, தெக்கனூர், தொக்குளம், செங்கானூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தனபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது விஜயகாந்த் பேசுகையில், என் பேச்சை கேட்க யாரும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று திமுகவும், அதிமுகவும் மக்களுக்கு பணம் கொடுத்து மிரட்டியிருப்பதாக கூறுகிறார்கள். இருந்தாலும் என் பேச்சை கேட்க இவ்வளவு பேர் வந்துள்ளீர்கள்.
திமுக கூட்டணியில் முன்பு கம்யூனிஸ்ட், பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. அதனால் திமுக கொடியுடன் மற்ற கட்சிக் கொடியும் சேர்ந்திருக்கும். ஆனால் இப்போது அந்த கொடிகள் எல்லாம் அந்த பக்கம் போய் விட்டது.
அதிமுக இந்த தேர்தலில் கூட்டணி மற்றும் பணபலத்தை நம்பி உள்ளது. திமுகவோ அராஜகம் மற்றும் பணபலத்தை நம்பி இந்த தேர்தலில் நிற்கிறது. நான் தெய்வத்தையும், மக்களையும் நம்பி இந்த தேர்தலில் நிற்கிறேன். அதனால்தான் யாருடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடுகிறேன்.
விஜயகாந்த் தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளியே வருவார். மற்ற நேரங்களில் அட்ரஸ் இல்லாமல் இருப்பார் என்கிறார்கள்.
யார் அட்ரஸ் இல்லாமல் இருப்பது? தேமுதிக தலைவர் என்ற அட்ரசோடுதான் நான் இருக்கிறேன். எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் இருந்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
இன்றைக்கு இவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை போல் தனியாக தேர்தலில் நின்று போட்டி போடுங்கள். அந்த தைரியம் இல்லாமல் என்னை குறை சொல்லாதீர்கள்.
எப்போதுமே அடுத்தவர்களை குறை சொல்லும் போது தன்னுடைய முதுகில் உள்ள அழுக்கை திரும்பி பார்த்து விட்டு சொல்ல வேண்டும். நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் கட்சி ஆரம்பித்துள்ளேன்.
திருமங்கலம் தொகுதி மக்கள் தமிழக மக்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும் வகையில் தேமுதிகவை வெற்றி பெற செய்ய வேண்டும். என்னிடம் உறுதியும், தைரியமும் இருக்கிறது. அதனால்தான் நான் மக்களிடம் தைரியமாக பேசி வருகிறேன்.
இந்த விஜயகாந்த் நல்லவனா? அவரால் தொகுதி என்ன செய்ய முடியும் என்ற சந்தேகம் இருக்கலாம். அல்லது அந்த சந்தேகத்தை உங்களுக்கு திமுகவும், அதிமுகவும் தூண்டிவிட்டிருக்கலாம்.
நான் ஆட்சிக்கு வராமலேயே மாவட்டந்தோறும் கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்தை நிறுவி ஏழை மாணவர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வருகிறேன்.
அதே போல் இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை லட்சம் பேருக்கு வழங்க முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம்.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 3 லட்சம் வரை என்னுடைய சொந்த பணத்தை நான் செலவு செய்துள்ளேன்.
நான் சினிமாவில் நடிப்பது சம்பாதிப்பதற்காக அல்ல. அந்த பணத்தை கொண்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நடித்து வருகிறேன்.
இந்த தொகுதியில் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை நீங்கள் வெற்றி பெற செய்தால் விருதாச்சலம் தொகுதியில் நான் என்னென்ன திட்டங்களை அப்பகுதி மக்களுக்கு செய்து வருகிறேனோ அதே போல் இந்த தொகுதிக்கும் கண்டிப்பாக செய்வேன்.
உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்ய தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சி வரும் போதெல்லாம் ரவுடிகளின் ராஜ்யம் தலைவிரித்தாடுகிறது. அதை ஒடுக்குவதற்கு மக்கள் விழிப்புடன் இருந்து தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனுக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.