சத்யம் நிறுவனத்துக்கு நாஸ்காம் தடை?
ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தைத் தடை செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது நாஸ்காம்.
இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்களின் தலைமை அமைப்பாகத் திகழ்கிறது நாஸ்காம்.
சத்யம் நிறுவனம் நீண்ட காலமாகவே நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததை அதன் நிறுவனர் மற்றும் தலைவர் ராமலிங்க ராஜுவே ஒப்புக் கொண்டதால், இனியும் நாஸ்காமில் சத்யம் நிறுனத்தை நீடிக்க விடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நாஸ்காம் தலைவர் கணேஷ் நடராஜன் கூறுகையில், சத்யம் நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக தனது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்திருப்பதை நினைத்தால் ஷாக் ஆக உள்ளது. சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ள மோசடிகள் மற்றும் நம்பிக்கை துரோகத்தை வைத்துப் பார்க்கும்போது, நாஸ்காமிலிருந்து அந்த நிறுவனத்தை நீக்குவதே சரி எனத் தோன்றுகிறது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகத் திறன் மற்றும் நேர்மை குறித்து அரசு இனி கண்காணிப்பது அவசியமாகிவிட்டது.
இந்த மோசடிகள் மற்றும் பின்னடைவுகளால் சத்யம் நிறுவனத்தின் 50 ஆயிரம் ஊழியர்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். அதற்கேற்ற நடவடிக்கைகளுக்குத்தான் இப்போது முன்னுரிமை தர வேண்டும்.
சத்யம் நிறுவனத்தின் மோசடி்களால் உலக அளவில் இந்தி ஐடி நிறுவனங்கள் மீது சந்தேகம் வந்துவிட்டது. இனி என்ன சொன்னாலும் சர்வதேச நிறுவனங்கள் நம்புவார்களா என்பது சந்தேகமே. நிறைய கம்பெனிகளின் வருவாய் வாய்ப்புகளுக்கு ஆபத்து வந்துள்ளது.
முதலீட்டாளர்களும் முழுமையாகப் பின்வாங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பிரச்சினைகள் போதாதென்று, சர்வதேச நிறுவனங்களை சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பும் நாஸ்காமுக்கு வந்துள்ளது, என்றார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான ராமலிங்க ராஜு, நாஸ்காம் அமைப்பின் தலைவராக 200-2007-ம் ஆண்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications