Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஆண்டிலேயே அதிமுக ஆட்சி வரும்!!!-ஜெ

Subscribe to Oneindia Tamil

திருமங்கலம்: இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

திருமங்கலத்தில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து நேற்றிரவு தேவர் சிலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திருமங்கலம் தொகுதியில் நியாயமாக நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை தட்டிப்பறிக்க திமுகவினர் எத்தனையோ வழிகளில் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் செய்ய இருக்கும் மோசடிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் செய்துள்ளோம்.

தேர்தல் ஆணையமும் இந்த சதித்திட்டத்தை முறியடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது (!?).

இது போதாது என்று வாக்காளர்களையும் திமுகவினர் மிரட்டி வருகிறார்கள். வாக்குச் சாவடிகளில் பொருத்தப்படும் கேமரா வன்முறை சம்பவங்களை படம் பிடிப்பதற்குத்தான். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை யாரும் படம் பிடிக்க மாட்டார்கள். எனவே 9ம் தேதி நீங்கள் தைரியமாக உங்கள் விருப்பப்படி இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். திமுகவினரின் வெத்து வேட்டு மிரட்டல்களை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம்.

திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தோல்வி பயத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் வன்முறையை திமுககட்டவிழ்த்து விட்டிருக்கிறது. அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் வெற்றி பெறுவது உறுதி என்பதால்தான் அதிமுகவினரை தேர்தல் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.

அதிமுகவினரை காவல்துறையினரும் சேர்ந்து தாக்குவதோடு, அவர்கள் மீதே போலீசாரை தாக்கியதாக பொய் வழக்கும் போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். வாக்காளர்களாகிய நீங்கள்தான் இதற்கு ஒரு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

எங்களுக்கு தோல்வி பயம் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அவர்தான் தோல்வி பயத்தில் பேசி வருகிறார். அதனால்தான் வன்முறையால் குறுக்கு வழியில் வெற்றியை பெற நினைக்கிறார். அது நடக்காது.

திருமங்கலம் தொகுதியில் கடைசி நாளுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் அரை பவுன் தங்க நாணயம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வந்தால் விடாதீர்கள். பெற்றுக் கொள்ளுங்கள். அதை வைத்து பொங்கலை தடபுடலாக கொண்டாடுங்கள். அதற்கு முன் 9ம் தேதி இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள்.

எனது ஆட்சி காலத்தில் சுடர் விட்டு பிரகாசமாக இருந்த தமிழகம் இப்போது இருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மின் வெட்டு நிலவுகிறது. திமுகஆட்சியில் 2,000 முதல் 3,000மெகாவாட் வரை மின் உற்பத்தி குறைந்திருக்கிறது. எண்ணூர், வட சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்கள் பராமரிப்பின்றி உற்பத்தி குறைந்துள்ளது. 14 லட்சம் டன் நிலக்கரியை மத்திய அரசு தனது தொகுப்பில் இருந்து வழங்குவதை குறைத்து விட்டது.

தரமற்ற நிலக்கரியை தமிழக அரசு இறக்குமதி செய்கிறது. அதேபோல 4.5 லட்சம் கன மில்லியன் எரி வாயுவையும் மத்திய அரசு குறைத்துவிட்டது. 1000 முதல் 1500 மெகாவாட் வரை மத்திய மின் தொகுப்பில் இருந்து வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுதான் இன்றுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம்.

எனது ஆட்சியில் முறையாக கண்காணித்து மத்திய அரசு தொகுப்பில் இருந்து வழங்குவதை குறைக்காமல் பார்த்துக்கொண்டேன். 3,000 மெகாவாட் நிறுவு திறன் ஏற்படுத்திக்கொடுத்த என் மீது வீண் பழி சுமத்துகிறார். என் ஆட்சி காலத்தில் இருந்த மின் உற்பத்தி இப்போது இருந்தாலே மின் வெட்டே வராது.

பசித்தவனுக்கு மீன் தருவதை விட அவனுக்கு மீனை பிடிக்க கற்றுத்தருவது நல்லது என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது சுய தொழில் தொடங்க எந்த நிதி உதவியும் அளிக்காமல் இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனது ஆட்சியில் நிதி ஆதாரத்தை பெருக்க வரி விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் விலைவாசியும் கட்டுக்குள் இருந்தது. வருவாயும் கிடைத்தது. ஆனால் இப்போது வரியை குறைத்து அறிவித்துள்ளார்கள். ஆனால் எந்த விலையும் குறைய வில்லை. இதனால் பயன் அடைந்தவர்கள் யார்? மக்களுக்கும் பயன் இல்லை. அரசுக்கு வருவாயும் இல்லை.

நெல்லை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 14,400 யூனிட் மணல் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. நம்பியாற்றில் இருந்து 7,200 யூனிட் மணல் கடத்தப்படுகிறது. இதன் மூலம் ரூ.3.8 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வைகை ஆறு உள்பட அனைத்து ஆற்றுப்படுகைகளில் இருந்தும் மணல் எடுக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் கனிம வளம் அழிந்து தண்ணீருக்கு திண்டாட வேண்டி வரும்.

தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொலை, கொள்ளை போலீஸ் நிலையங்கள் அருகிலேயே நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு ஜம்மு-காஷ்மீர் போல் ஆகி விடும்.

உறுதியாக சொல்கிறேன், இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ மக்கள் மன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும். கடமையை மறந்து, சட்டத்தை மறந்து போலீசார் நடந்து கொண்டதை நான் மறக்க மாட்டேன். சட்டப்படி இந்த பிரச்சினையை சந்தித்து அவர்கள் காக்கி சட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாமல் செய்வேன். அதற்கு நீங்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறிவிட்டு, பொருளாதார மண்டலம், தகவல் தொழில்நுட்ப பூங்கா என்று விளை நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஏழைகளின் நிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த நிலங்களை எல்லாம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதை ஒப்படைப்பது தான் அதிமுக ஆட்சி செய்யப்போகும் முதல் வேலையாக இருக்கும்.

திருமங்கலத்தில் பாதாள சாக்கடை திட்டம், பஸ் நிலைய விரிவாக்கம், மருத்துவமனை மேம்பாடு, திருப்பரங்குன்றத்திற்கு வைகை குடிநீர், மல்லிகை சென்ட் தொழிற்சாலை, கள்ளிக்குடி பகுதியில் புதிய அணை கட்டும் திட்டம் ஆகியவற்றை விரைவில் அமைய இருக்கும் அதிமுக அரசு நிறைவேற்றும்.

தமிழ்நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையவும், அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கவும் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு வாக்களியுங்கள். இந்த இடைத்தேர்தல் முடிவு தமிழ்நாட்டுக்கு மட்டும் திருப்புமுனையாக அமையப் போவதில்லை. அது இந்தியாவுக்கே திருப்புமுனையாக அமையப் போகிறது என்றார் ஜெயலலிதா.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் ஜெயலலிதா கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடத்தில் அபார நம்பிக்கையுள்ளவர் ஜெயலலிதா. இந்த ஆண்டே முதல்வராவீர்கள் என்று ஜோதிடர்கள் யாராவது அவருக்கு சொல்லியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+