'கொத்தடிமை, அடியாள், எடுபிடி'- ஜெ மீது போலீஸ் பேரமைப்பு பாய்ச்சல்
சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தினர் நல பேரமைப்பின் தலைவர் சுப.சீதாராமன், பொதுச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:
தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போலீசார் திமுகவின் கொத்தடிமைகளாகவும், அடியாட்களாகவும், எடுபிடிகளாக செயல்படுவதாகவும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் போலீசாரை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்றும் பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாக எச்சரித்து வருகிறார்.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தொடங்கியது முதல் ஜெயலலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் விருப்பு வெறுப்பின்றி பணியாற்றும் காவல் துறையினரை வாயில் வந்தபடி பேசி வருகின்றனர். நசுக்கி விடுவோம், பழிவாங்குவோம் என்று அவர்கள் பகிரங்கமாக பேசி வருவது பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.
தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா இத்தகைய வரம்பு மீறிய சட்ட விரோத பேச்சுகளை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளை காரணமின்றி மாற்றிட காரணமாக இருந்துள்ளார்.
அரசு அலுவலர்களை நேர்மையாக தேர்தல் பணி செய்யவிடாமல் ஜெயலலிதாவும், வைகோவும் அச்சுறுத்தி வருவது விருப்பு வெறுப்பின்றி செயல்படும் காவல் துறையினரின் மற்றும் அரசு அலுவலர்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிற அரசு ஊழியர் சங்கம் போல், போலீசாருக்கும் சங்கம் இருந்திருந்தால் ஜெயலலிதாவிற்கும், வைகோவுக்கும் சரியான பதிலடி கொடுத்திருப்பார்கள். அதிமுக என்ற கட்சி ஆளும் கட்சியான காலம் முதல் போலீசாரை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 1979-80ம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரை டிஸ்மிஸ் செய்து அவர்கள் குடும்பங்களை போலீஸ் காலனியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி கோரத்தாண்டவமாடினார்கள்.
ஓரிரு போலீசார் இதனால் தற்கொலை செய்து கொண்டனர்.
அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி முயற்சியின் பேரில் மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் துணையோடு பிரதமர் இந்திரா காந்தியை நாங்கள் இருவரும் டெல்லியில் சந்தித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான போலீசார் மீண்டும் வேலையில் சேர்ந்ததை நாடு மறவாது.
இப்படி அதிமுக என்பது போலீசாரை பிறவி எதிரியாக கருதி பழிவாங்குவதும், நசுக்குவதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல், ஆணையம் ஆகியவை ஜெயலலிதா, வைகோ ஆகியோர் போலீசாரை மிரட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வரும் குற்றத்திற்காக கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்று இவர்களது மிரட்டலால் கலங்கும் போலீசார் குடும்பங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications