''போடுங்கம்மா ஓட்டு..ரெட்டலையை பார்த்து''-வைகோ
திருமங்கலம்: திமுகவுக்கு பவர் கட் செய்ய திருமங்கலம் தொகுதி வாக்காளர்கள் தயாராக உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
இந்தத் தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள்.
உழவர் பெருங்குடி மக்கள் வீதிவீதியாக வருகிற மந்திரிகளை பார்த்துக் கேட்கிறார்கள். "பம்பு செட்டுகளை இயக்க முடியவில்லை. மின் வெட்டால் விளக்கு எரியவில்லை. குழந்தைகள் படிக்க முடியவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் மின்வெட்டுக்கு இடமில்லை. அதனால் 9ம் தேதி உங்கள் பவரை கட் செய்வது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம்'' என்கிறார்கள்.
தோற்றுப் போவோம் என்ற எண்ணத்தில் வீடு வீடாக கங்கை வெள்ளம் போல இந்த பணத்தை பாய்ச்சி வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்று பண மூட்டைகளை அள்ளிக்கொண்டு அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தத் தொகுதி மக்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றார்.
தெருச்சண்டை போடும் கருணாநிதி- வரதராஜன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் பேசுகையில்,
இந்த இடைத்தேர்தல் பல்வேறு அரசியல் முக்கியத்துவங்கள் வாய்ந்தது. ஆனால், தெருச்சண்டை போடுவது போல திமுக தலைவர் பேசுகிறார். நேற்று எங்களை ஆதரித்தார்கள். இன்று அவர்களை ஆதரிக்கிறார்கள்' என்று கூறுகிறார்.
திமுக அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சலாம் போடுகிறது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியத்தை எதிர்த்த அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்.
விலைவாசி உயர்வு, தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணமான மத்திய அரசை அவர்கள் ஆதரிப்பதால் நாங்கள் விலகி உள்ளோம்.
அரசியலை அரசியலாக சந்தியுங்கள். இன்று நாங்கள் எடுத்துள்ள கூட்டணி முடிவு சிறந்த முடிவு. இந்த கூட்டணி சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான். இதன் மூலம் அவர்களது அராஜகத்துக்கு அடி கொடுக்க வேண்டும். திருமங்கலத்தில் ஏற்படும் திருப்பம் அகில இந்திய அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் மாற்றத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்றார்.
அது வெற்றுக் காற்று- தா.பாண்டியன்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,
இங்கு குவிந்திருக்கும் ஏராளமான மக்கள், தங்கள் சக்தியை வரும் 9ம் தேதி நடக்கும் வாக்குப்பதிவின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.
நேற்று முதல்வர் கருணாநிதி, இங்கு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, திமுகவுக்கு வெற்றிக் காற்று வீசுவதாக கூறினார். மூத்த அரசியல்வாதி என்ற முறையில் நான் மிகவும் மரியாதையுடன் ஒன்றை அவருக்கு கூறுகிறேன். நேற்று உங்கள் உடலை தழுவியது வெற்றுக் காற்று. இன்று இங்கு வீசுவதுதான் வெற்றிக் காற்று.
இந்த தொகுதியில் நமது வெற்றியை யாரும் தடுக்க முடியாது. அது உறுதி. இந்திய அளவில் இந்த வெற்றி மாற்றத்தை உருவாக்குவதும் உறுதி என்றார்.
கூட்டத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இந்திய தேசிய லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் தாவூத் மியான் கான் உள்பட பலர் பேசினர்.












Click it and Unblock the Notifications