5வது கல்யாணமும் செய்து பணம் பறித்த சங்கீதா
சென்னை: சென்னை சைதாப்பேட்டையி்ல் முதிய தம்பதியை ஈவு இரக்கமின்றி கொலை செய்ய தனது 4வது கணவரை ஏவிய சாகச பெண் சங்கீதா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 5வதாக சென்னை தொழிலதிபரை கல்யாணம் செய்து பணம் பறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கணவன்-மனைவி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தினேஷ், புகழேந்தி, செந்தில்நாதன் ஆகிய 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியும், கொலைக்கு மூளை செயல்பட்ட சாகசக் கொலைகாரியுமான சங்கீதாவை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.
நேற்று சங்கீதாவையும், அவரது கணவர் தினேஷ் மற்றும் அவருடன் கைதான செந்தில்நாதன், புகழேந்தி ஆகியோரையும் ஒன்றாக வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். பின்னர் கொலை நடந்த வீட்டுக்கு அவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது தினேசும், மற்ற இருவர்களும் கொலை செய்தது எப்படி என்று நடித்துக் காட்டினார்கள். பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள தினேசின் வீட்டுக்கும் இவர்களை அழைத்து சென்று விசாரணை நடந்தது.
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும், தினேஷ் மற்றும் இருவரின் ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். விசாரணையின்போது சங்கீதாவும், தினேசும் ஒருவரையொருவர் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
சங்கீதா தன்னை ஏமாற்றி, கொலை வழக்கில் சிக்க வைத்து விட்டதாக தினேஷ் ஆத்திரத்தோடு உள்ளார். கோபத்தில் சங்கீதாவை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக போலீசார் தினேசை பத்திரமாக பார்த்துக்கொண்டனர்.
நடித்துக் காட்டிய சங்கீதா:
இவர்களிடமிருந்து 26 சவரன் கொள்ளை நகைகளையும், ரூ.3,000 பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
சங்கீதாவிடம் விசாரணை நடத்திய காட்சிகளையும், கொலை செய்தது எப்படி என்று தினேசும், அவரது கூட்டாளிகளும் நடித்து காட்டிய காட்சிகளையும் போலீசார் வீடியோ படமாக எடுத்தனர்.
சங்கீதா, கொலை செய்யப்பட்ட அனந்தகிருஷ்ணனோடு சென்னை அண்ணாசாலை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள துப்பறியும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. துப்பறியும் நிறுவனத்தின் உதவி தேடி வந்த ஏராளமானவர்களையும் சங்கீதா மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தொழிலதிபரை 5வது மணந்து பணம் பறித்தார்...:
தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரது நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கும்படி தொழிலதிபர் ஒருவர் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடி உள்ளார்.
இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிடுவோம் என்று பயமுறுத்தி அந்த தொழிலதிபரிடம் சங்கீதா பணம் கறந்துள்ளார். இதுபற்றி துப்பறியும் நிறுவனத்திலும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில் ஏற்கனவே 4 பேரை மணந்து மோசடி செய்த சங்கீதா, 5வது திருமணமும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துப்பறியும் நிறுவனத்தோடு தொடர்புள்ள தொழிலதிபர் ஒருவரைத்தான் சங்கீதா 5வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கீதாவிடம் கேட்டபோது, அந்த தொழில் அதிபர் என்னிடம் பெரிய அளவில் செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று மட்டும் மழுப்பலாக பதில் அளித்தார். இதுபற்றி விரிவாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சங்கீதாவை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன்பேரில், சங்கீதா சென்னை புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சங்கீதா நேற்று கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டபோது, முகத்தை தனது சேலையால் மூடிக்கொண்டார். கோர்ட்டில் அவரை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
போலீஸ் காவலில் எடுக்க மனு...:
இதற்கிடையே, சங்கீதாவை தங்களது காவலில் வைத்து விசாரிக்க திட்டமிட்ட போலீஸார் 5 நாள் காவல் கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு செய்தனர்.
இதை ஏற்ற நீதிபதி கலைப்பொன்னி, விசாரணையை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications