யுஎஸ்: செவிலியை சுட்ட 4 வயது சிறுவன்
ஜாக்சன் (ஓஹையோ, அமெரிக்கா): அமெரிக்காவின் ஜாக்சன் நகரில், தெரியாமல் காலை மிதித்து விட்ட பள்ளிக்கூட செவிலிப் பெண்ணை துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான் 4 வயது சிறுவன். அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர் தப்பியுள்ளார்.
அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் உள்ள நகரம் ஜாக்சன். இந்த ஊரில் நடமாடும் சிறார் பராமரிப்பு இல்லம் உள்ளது. இங்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களது குழந்தைகளை விட்டு விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நடமாடும் பராமரிப்பு இல்லத்தில் ஏராளமான சிறுவர்கள் பராமரிப்புக்கு விடப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர்தான் நமது ஹீரோ ஈதன் கிரிஸ்ப். இவருக்கு வயது 4.
இந்த நடமாடும் இல்லத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக சில செவிலிப் பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நாதன் பீவர்ஸ். 18 வயதான இந்தப் பெண், சம்பவ தினத்தன்று நடக்கும்போது ஈதனின் காலை தெரியாமல் மிதித்து விட்டார்.
இதனால் வீரிட்டழுதான் ஈதன். இதையடுத்து குழந்தையை சமாதானப்படுத்திய பீவர்ஸ் அடுத்த குழந்தையைப் பார்க்கப் போய் விட்டார்.
அப்போது ஈதன் எழுந்து அருகில் இருந்த அறைக்குப் போனான். ஏதாவது பொம்மையை எடுத்து வரப் போகிறானாக்கும் என மற்றவர்கள் நினைத்தனர்.
ஆனால் அந்த அறையில் இருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்த ஈதன், பீவர்ஸை நோக்கி திடீரென சுட்டுள்ளான்.
அது ஒரு முறைக்கு ஒரு குண்டை மட்டும் போட்டு சுடக் கூடிய ஷாட் கன் ஆகும். அந்தத் துப்பாக்கிக்குரிய குண்டை, டேபிளிலிலிருந்து எடுத்து லோட் செய்து சுட்டுள்ளான் ஈதன். அதிர்ஷ்டவசமாக பீவர்ஸ் பெரிய காயமின்றி தப்பினார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள்தான் துப்பாக்கியும், கையுமாக திரிகிறார்கள் என்றால் ஈதன் பிஞ்சிலேயே பழுத்திருப்பது அமெரிக்க கலாச்சாரத்தின் 'ஈரல்' அழுகி விட்டதாகவே நினைக்கத் தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications