சத்யம் இயக்குநர் குழு கலைப்பு: புதிய இயக்குநர்களை அரசு நியமிக்கிறது!
இதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நடக்கவிருந்த சத்யம் நிறுவன இயக்குநர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா கூறுகையில்,
சில தனிப்பட்ட நபர்களின் பேராசைக்கு சத்யம் என்ற நிறுவனமும், அதன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் பலியாகியிருப்பது வேதனை.
இப்போது அரசு மேற்கொண்டுள்ள புதிய முடிவின்படி சத்யம் நிறுவனத்தில் தற்போதுள்ள இயக்குநர்கள் அனைவரும் நீக்கப்படுகிறார்கள். இந்தக் குழு சனிக்கிழமை நடத்தவிருந்த கூட்டமும் ரத்து செய்யப்படுகிறது. தற்போதைய சத்யம் இயக்குநர்கள் குழுவில் 3 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை நீக்கப்படுவார்கள்.
சத்யம் நிறுவனத்துக்கு 10 பேர் கொண்ட இயக்குநர் குழுவை அரசே நிர்ணயிக்கும். இந்தக் குழுதான் இனி சத்யம் நிர்வாகத்தை கவனிக்கும்.
தகுதியான நபர்கள் நிறுவன இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட 7 நாட்களில் புதிய இயக்குநர்கள் குழுக் கூட்டம் நடக்கும்.
அரசு முடிவு- சத்யம் வரவேற்பு:
தற்போதுள்ள இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்ட 10 புதிய இயக்குநர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவை சத்யம் நிறுவனம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து சத்யம் சார்பில் சனிக்கிழமை அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசின் புதிய முடிவை சத்யம் நிறுவனம் முழு மனதுடன் வரவேற்கிறது.
சத்யம் நிறுவன ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தாங்கிப் பிடிக்கும் விதத்தில் உள்ளது அரசின் இந்த அறிவிப்பு, என்று கூறியுள்ளது.
நாஸ்காம் வரவேற்பு:
அரசின் இந்த முடிவு சந்தோஷமளிப்பதாகவும், முழு மனதுடன் வரவேற்க வேண்டிய ஒன்று என்றும் நாஸ்காம் தலைவர் கணேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்கள் குழுமையும், நிர்வாகத்தையும் தனித்தனியாக வைத்திருப்பதே நிறுவனத்துக்கு நல்லது என்பதை அரசின் இந்த முடிவு உணர்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எச்டிஎப்சி நம்பிக்கை:
அரசின் முடிவு புதிய நம்பிக்கைகளை விதைப்பதாகவும், புதிய இயக்குநர்கள் குழு சத்யம் ஊழியர்களைக் கைவிடாது என்ற பாதுகாப்புணர்வு பிறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. பணிகளில் சுணக்கமில்லாமல் பார்த்துக் கொள்வதோடு, மீண்டும் சத்யம் வலிமையான நிறுவனமாகத் திகழ வேண்டும் என்றும் எச்டிஎப்சி தலைவர் பரேக் தெரிவித்துள்ளார்.
செபி முன் இன்றும் ஆஜராகும் ராஜு!
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள ராஜுவை செபி அதிகாரிகள் இன்றும் விசாரிக்கவுள்ளனர்.